ஈஸ்டர் – தமிழக சர்ச்சுகளில் கிறிஸ்தவர்கள் கொண்டாட்டம்
சென்னை: ஈஸ்டர் பண்டிகை இன்று தமிழகத்தில் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
சிலுவையில் அறையப்பட்ட இயேசு நாதர், மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்த்தை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். இன்று ஈஸ்டர் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் சர்ச்சுகளுக்குச் சென்று சிறப்பு பிரார்த்தனைகளில் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் திரண்டு வந்து வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.
வேளாங்கண்ணியில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.பல்வேறு பகுதிகளிலிருந்து மரத்தால் ஆன சிலுவையை சுமந்தபடி பலர் பாதயாத்திரையாக வந்து வழிபட்டனர்.
தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிர மாநிலங்களிலிருந்தும் பெருமளவிலான பக்தர்கள் வந்திருந்தனர்.
இன்று காலை தமிழ் உள்பட அனைத்துத் தென்னிந்திய மொழிகளிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.
சென்னையில் சாந்தோம் பேராலயம், புனித தாமஸ் பேராலயம் உள்ளிட்டவற்றில் ஈஸ்டரையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
கருணாநிதி வாழ்த்து
முன்னதாக ஈஸ்டரை முன்னிட்டு முதல்வர் கருணாநிதி வாழ்த்து செய்தி வெளியிட்டிருந்தார்.
அதில்,
ஈஸ்டர் திருநாள். கிருத்துவ சமுதாய மக்கள் இந்த நாளை துன்பம் அகன்று இன்பம் பூத்த திருநாள் என போற்றுகிறார்கள். கிருத்துவ சமயம் பொதுவாக தொண்டு சமயம் என மதிக்கப்படுகிறது. அது சகிப்புதன்மையை மனித சமுதாயத்தில் வலியுறுத்துகிறது. இயேசு பெருமான் அன்பு, பொறுமை, கருணை, இரக்கம் ஆகிய பண்புகளை போதித்தார்.
எப்பொழுதும் தீமைகள் நெருங்காதவாறு விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கூறிய இயேசுநாதர், ஒருவனும் உங்களை வஞ்சிக்காதபடி எச்சரிக்கையாயிருங்கள், என்று அறிவுரை பகர்ந்தார், தாம் பிறரிடம் எதிர்பார்ப்பதையே தானும் பிறருக்கு செய்ய வேண்டும் என்றும் போதித்தார். இது, இயேசுநாதர் போதித்த முதன்மையான நீதிகளில் ஒன்றாகும். கிருத்துவ சமயத்தால் பொன்விதி' என போற்றப்படும் இந்த நீதியை மனித சமுதாயத்திற்கு ஒரு வழிகாட்டி நெறி என கிருத்தவர்களும், கிருத்தவர் அல்லாதவர்களும் கருதுகின்றனர்.
மேலும், இயேசுபெருமான், அருகிலுள்ளவர்களை நேசிக்க வேண்டும் என்றும், பகைவர்களை வெறுக்க வேண்டும் என்றும் சொல்ல கேட்டிருக்கிறீர்கள். ஆனால், நான் உங்களுக்கு கூறுகிறேன். உங்கள் பகைவரை நேசியுங்கள். உங்களை சபிப்பவர்களுக்கு நீங்கள் ஆசி கூறுங்கள். உங்களை வெறுப்பவர்களுக்கு நீங்கள் நன்மையே செய்யுங்கள் என கூறித் தூய மனிதநேயம் தழைக்கவும் வழிகாட்டினார்.
இத்தகைய அருளாளரை-புனிதரை வணங்கி மகிழ்ந்து கொண்டாடும் இந்த நாளில் தமிழகத்தில் வாழும் கிருத்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் கருணாநிதி












Click it and Unblock the Notifications