கலாம் வெளிநாடு செல்லக் கட்டுப்பாடா? - பிரதமர் அலுவலகம் மறுப்பு!

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுக்கு உள்நாடு மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் இருந்தும், ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருமாறு அழைப்புகள் வருவது வழக்கம்.
விஞ்ஞானம், ஆராய்ச்சி, கல்வி, தொழில்நுட்பம், சமூக சிந்தனை என பல மட்டங்களிலும் அவர் ஆர்வம் காட்டி வருவதால், குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னர் ஏராளமான நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டு வருகிறார்.
கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் அவர் 25க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இவ்வாறு அவர் மேற்கொள்ளும் அதீத பயணங்களுக்கு இந்திய அரசு தான் செலவழிப்பதாகக் கூறி ஆங்கில பத்திரிகை ஒன்று சமீபத்தில் செய்தி வெளியிட்டது.
மேலும் இதுபோன்ற பயணச் செலவுகளை குறைக்க மத்திய அரசு புதிதாக சில கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டிருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், பிரதமர் அலுவலகம் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், 'முன்னாள் குடியரசுத் தலைவர்களின் வெளிநாட்டு பயணம் தொடர்பாக எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்க எண்ணமில்லை. இதுபோன்ற திட்டங்கள் எதுவும் மத்திய அரசிடம் இல்லை.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைப் பொறுத்தவரை, அவரின் விமானப் பயணச் செலவு, தங்குமிடம், உணவு போன்றவற்றுக்கான செலவினங்களை அந்தந்த நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் தான் செய்து வருகிறார்கள்.
அதோடு, எந்த நாட்டின் அழைப்பை ஏற்று அவர் செல்கிறாரோ அந்த நாட்டு அரசே கூட அதற்கான செலவுகளை ஏற்றுக் கொள்கிறது. இதில் மத்திய அரசின் பங்கு ஒன்றுமில்லை' எனக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications