சாவின் விளிம்பில் 17 இந்தியர் - உதவத் தயார், அப்பீல் செய்யலாம் என அமீரகம் அறிவிப்பு!
டெல்லி: ஷார்ஜாவில் மரண தண்டனை பெற்றுள்ள 17 இந்தியர்களும் மேல் முறையீடு செய்வதற்கான சட்ட உதவிகள் வழங்கப்படும் என்று டெல்லியில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஷார்ஜாவின் அர் சஜா என்ற பகுதியில் இந்தியர் மற்றும் பாகிஸ்தானியர் சிலருக்கு இடையே மோதல் மூண்டது.
இதில் ஒரு பாகிஸ்தானியர் கொல்லப்பட்டார். மேலும் 3 பாகிஸ்தானியரையும் கொல்ல முயற்சி நடந்தது. ஆனால் அவர்கள் காயத்துடன் தப்பி ஓடி விட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 17 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். வழக்கை விசாரித்த ஷார்ஜா கோர்ட் நீதிபதி யூசுப் அல் ஹமாதி கடந்த 29ம் தேதி தீர்ப்பளித்தார்.
குற்றம்சாட்டப்பட்டோருக்கு எதிராக அனைத்து ஆதாரங்களும் நிரூபிக்கப்பட்டதாக் கூறி, 17 இந்தியர்களுக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தீர்ப்பை துரதிருஷ்டவசமானது எனக் கூறிய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, 17 இந்தியர்களும் மேல் முறையீடு செய்வதற்கான உதவிகள் செய்யப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள அமீரக தூதரகம் இன்று இதுதொடர்பாக ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், 'ஷார்ஜாவில் மரண தண்டனை பெற்றுள்ள 17 இந்தியர்களும் மேல் முறையீடு செய்வதற்கு சட்டப்படியான அனைத்து வாய்ப்புகளும், வழிவகைகளும் உள்ளன.
மேலும் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் தன்னை நிரூபிக்க தேவையான வாய்ப்புகள் அளிக்கவும் அமீரகம் தயாராக உள்ளது. தண்டனை பெற்றுள்ள 17 இந்தியர்களும் மேல் முறையீடு செய்வதற்கு வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்வது போன்ற, உதவிகளை அளிக்கவும் அமீரக அரசு தயாராக உள்ளது' எனக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications