மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் செண்பகவல்லி அணை - லிங்கம் எம்பி ஆய்வு
வாசுதேவநல்லூர்: வாசுதேவநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பழுதடைந்துள்ள செண்பகவல்லி அணைக்கட்டு பகுதியை தென்காசி எம்.பி லிங்கம் ஆய்வு செய்தார்.
வாசுதேவநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கேரள - தமிழக எல்லை பகுதியில் திருவிதாங்கூர் மற்றும் சிவகிரி ஜமீன் ஆட்சி காலத்தில் செண்பகவல்லியாறு அணைக்கட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டு 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
அதன்படி வாசுதேவநல்லூர், சிவகிரி, சங்கரன்கோவில், மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முதல் சாத்தூர் வரை விவசாய நிலங்கள் பயனடையும் வகையில் தமிழக எல்லை பகுதியை நோக்கி கன்னியா மதகு அமைக்கப்பட்டது.
இந்த மதகு கடந்த 1976ம் ஆண்டு கனமழையால் இடிந்து விழுந்தது. அதன் பிறகு எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் அதனை சீர்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு தமிழக அரசின் பங்கு தொகையாக ரூ.5 லட்சம் கேரள அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.
மதகு சீரமைப்பு பணியை இழுத்தடித்த கேரள அரசு 2006ம் ஆண்டு அப்பணியை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி விட்டது.
கன்னியா மதகு சீரமைக்கப்படாததால் நெல்லை, விருதுநகர் மாவட்ட பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாக மாறின.
விவசாயம் அடியோடு அழிவதை தடுக்க கன்னியா மதகை சீரமைக்க கோரி தென்காசி எம்.பி லிங்கம், முதல்வர் கருணாநிதியை சந்தித்து மனு கொடுத்தார்.
இந்நிலையில் செண்பகவல்லி அணைக்கட்டு கன்னியா மதகு உடைப்பை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய லிங்கம் எம்பி நேற்று காலை அப்பகுதிக்கு சென்றார். அவருடன் 20 பேர் சென்றனர்.
அவர்களுக்கு பாதுகாப்பாக புளியங்குடி வனச்சரக வனவர் முருகையா, வனக்காப்பாளர் அருள் தேவதாஸ், வேட்டை தடுப்பு காவலர்கள் ஜோசப், கருப்பசாமி, கிருஷ்ணன் ஆகியோரும் சென்றுள்ளனர்.
வாசுதேவநல்லூர் - மதுரை மெயின் ரோட்டில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை செண்பகவல்லி எஸ்டேட் பகுதியில் உள்ள ஆலம்பாகி குகையில் மழையின் காரணமாக நேற்று இரவு தங்கினர்.
தொடர்ந்து இன்று காலையில் மதகு பழுதடைந்த பகுதியை பார்வையிட்டனர்.












Click it and Unblock the Notifications