காலாவதி மருந்து மோசடி - மேலும் ஒரு ஏஜென்ட் கைது!
சென்னை: காலாவதி மருந்து மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் போலீஸ் பிடியில் சிக்கிய மருந்து மோசடிக் கும்பலின் எண்ணிக்கை 13 ஆகியுள்ளது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மீனாட்சிசுந்தரத்தின் மனைவி சாத்தம்மாவையும் கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
சென்னையில் வெடித்து வெளிக்கிளம்பிய காலாவதி மருந்து விற்பனை விவகாரம் பல மாநிலத் தொடர்புகளைக் கொண்டதாக வியாபித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மீனாட்சி சுந்தரம், சஞ்சய்குமார், சேகர் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கொடுங்கையூர் போலீஸார் இதுதொடர்பாக விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்த ஏஜென்ட் பாஸ்கரை தேடி, சென்னை கே.கே.நகரில் உள்ள அவரின் வீட்டிடை போலீசார் தீவிரமாக கண்காணித்தும், விசாரணை நடத்தியும் வந்தனர்.
இதில் காலாவதி மருந்து சப்ளையில் பாஸ்கரோடு கைகோர்த்து செயல்பட்டதாக அவரது உறவினர் தர்மராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணைக்கு பிறகு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருடன் சேர்த்து இவ்வழக்கில் பிடிபட்டோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
ஆதோடு, முக்கிய குற்றவாளியான காலாவதி மருந்து கம்பெனி அதிபர் மீனாட்சிசுந்தரத்தின் மனைவி சாத்தம்மாவையும் குற்றவாளிகள் பட்டியலில் போலீசார் சேர்த்துள்ளனர்.
சாத்தம்மாவுக்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்டதால் அவரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிரமாக உள்ளனர்.
வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தால் திணறிய போலீஸ்
இதற்கிடையே, காலாவதி மருந்து மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளிகளான மீனாட்சிசுந்தரம், சேகர் ஆகியோரை 6 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க வழங்கப்பட்ட அனுமதி நேற்று மாலையோடு முடிந்துவிட்டது.
எனவே இவர்களை நீதிமன்றத்தில் நேற்று மாலை 4 மணிக்கே ஆஜர்படுத்தி இருக்க வேண்டும். சென்னை எழும்பூர் 13வது கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு பாக்கியஜோதி முன்னிலையில் ஆஜர்படுத்த போலீசார் இருவரையும் அழைத்து வந்தனர்.
அவர்களுடன், இவ்வழக்கில் வாலாஜா நீதிமன்றத்தில் சரணடைந்த சஞ்சய்குமார் என்பவரையும் நீதிபதி முன்பு ஆஜர் படுத்த போலீசார் அழைத்துவந்தனர்.
ஆனால், நீதிமன்ற வளாகத்தில் காலாவதி மருந்து மோசடி நபர்களுக்கு எதிராக் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், திட்டமிட்ட படி குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் மிகவும் திணறிப்போனார்கள்.
பலமுறை காவல் நிலையத்துக்கும், நீதிமன்றத்துக்கும் அலைந்துகொண்டிருந்த போலீசார் ஒரு வழியாக நேற்று இரவு 9 மணிக்கு ஆஜர்படுத்தினார்கள். பின்னர் மூவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications