மீண்டும் மேல்சபை கொண்டு வரப்படும் – கருணாநிதி அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் மீண்டும் மேல் சபை கொண்டு வரப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
சட்டசபையில் திமுக உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் (தி.மு.க.) பேசும்போது மீண்டும் தமிழ்நாட்டில் மேல்- சபை அமைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அவர் பேசி முடிந்ததும் முதல்வர் கருணாநிதி கூறியதாவது:
உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் மீண்டும் மேலவை அமைக்கப்பட வேண்டும் என்றார்.
இங்கே ஏற்பட்ட கூச்சல்- குழப்பத்தில் அவர் எந்த கருத்து கேட்டு வலியுறுத்தினார் என்பது பத்திரிகையாளர் உள்பட யாருக்கும் தெளிவாக தெரியாது. எனவே தெளிவாக நான் கூறுகிறேன். மேல்- சபை மீண்டும் கொண்டு வரப்படும்.
ஏற்கனவே மேல்- சபை எப்போது கலைக்கப்பட்டது. எதற்கு மேலவை தேவைப்பட்டது என்பதை இந்த அவையில் உள்ளவர்கள் அறிவார்கள்.
மேலவையை கலைக்கும் நிலை இதற்கு முன்பு தமிழ்நாட்டில் ஏற்பட்டு கலைக்கப்பட்டது. அந்த மேலவையில் பேராசிரியர் அன்பழகனும், நானும் இடம்பெற்று இருந்தோம்.
1-11-86-ல் ஒரு அறிவிப்பின் மூலம் மேல்- சபை கலைக்கப்பட்டது. அப்போது மேலவை தலைவராக இருந்த சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானம் வீற்றிருந்தார். மிகுந்த துயரத்தோடு அவர் மேலவை கலைத்ததை எடுத்து கூறினார்.
1986-க்கு பிறகு 1989-ல் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்த நேரத்தில் மீண்டும் மேல்- சபை வேண்டும் என தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றி டெல்லிக்கு அனுப்பி வைத்தோம்.
அந்த பதில் கிடைப்பதற்குள் அப்போது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. 4-10-91ல் மேலவை தீர்மானத்தை நீக்கியது.
மீண்டும் 1996-ல் மேலவை கொண்டு வரப்பட வேண்டும் என நாம் தீர்மானம் நிறைவேற்றினோம். கால சக்கரம் சுழன்று 2001-ல் மீண்டும் அவர்கள் நாம் கொண்டு வந்த தீர்மானத்தை நீக்கினர். மேலவை தீர்மானம் பல தடைகளோடு நின்றுவிட்டது.
இப்போது தேர்தல் முடிந்து தொடர்ச்சியாக நாம் வெற்றி பெற்றுள்ள நிலையில் மீண்டும் மேல்- சபை வேண்டுமென அனிதாராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அந்த கருத்து எனக்கும் உண்டு. அவை முன்னவருக்கும், அமைச்சர்களுக்கும், தி.மு.க. முன்னணியிருக்கும் அதே கருத்து உண்டு.
ஏன் என்றால் மேலவை இருந்தால் இத்தகைய கூச்சல்- குழப்பம் இல்லாத அவையாக காணப்படும். பெரும் அறிஞர் பெருமக்களை மேலவையில் சந்தித்து உள்ளோம். சட்டப்பேரவையில் ஏற்படுகிற சூட்டை தணிக்கும் வகையில் மேலவை செயல்படும்.
இதுபற்றி அண்ணா கூறும்போது, மேல்-சபை - கீழ்சபை கப் அன்ட் சாசர் போன்றவை என்றார்.
எனவே இனி மேல் கப் அன்ட் சாசர் உண்டு என்பதை நானே அறிவித்து விடவில்லை. இதற்கான விண்ணப்பத்தை நிறைவேற்றி அனுப்பி அனுமதி பெறவேண்டிய சூழ்நிலை விரைவில் வரும் என்றார்.
நன்மாறன் (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு): மேலவை வருவதை நாங்கள் எதிர்க்கிறோம்.
சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்டு): இந்தியாவில் பல மாநிலங்களில் மேல்- சபை இல்லை. நமது மாநிலத்திலும் இல்லை. மேல்- சபை வருவதை நாங்களும் விரும்பவில்லை.
முதல்வர் கருணாநிதி: இந்த கருத்தை எடுத்து வைப்பவர்கள் மேல்- சபையில் இடம்பெற மாட்டோம் என்ற உறுதியை இங்கு அளிக்க தயாராக இருக்கிறார்களா?
சிவபுண்ணியம்: தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதெல்லாம் மேல்- சபை கோரிக்கை வைக்கப்படுகிறது. எங்கள் கருத்து மேல்- சபை தேவையில்லை என்பதுதான். இந்த அவையில் உள்ளவர்களின் கருத்தை மட்டும் அல்லாமல் அரசியல் கட்சி தலைவர்களின் கருத்தையும் அறிய முயற்சி எடுக்க வேண்டும்.
சுதர்சனம் (காங்கிரஸ்): மேல்- சபை வருவதை காங்கிரஸ் மனப்பூர்வமாக ஆதரிக்கிறது.
முதல்வர் கருணாநிதி: மேலவையை வலியுறுத்தி இந்த மாமன்றத்தில் விரைவில் தீர்மானம் முன்மொழியப்படும். மேலவை உரிய நேரத்தில் உருவாகும் என தெரிவித்துக் கொள்கிறேன். டெல்லியில் ராஜ்ய சபாவில் உறுப்பினராக இருக்கமாட்டோம் என மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு சொல்லவில்லை. அங்கு இடம் பெற்று உள்ளனர். அதே போல இங்கேயும் இடம் பெறுவார்கள், இடம் அளித்தால்...." என்றார்.












Click it and Unblock the Notifications