நக்சலைட்டுக்களை ஒழிக்க விமானப்படைத் தாக்குதலுக்கும் அரசு தயார் – ப.சிதம்பரம்

நேற்று சட்டிஸ்கர் மாநிலம் தாண்டேவாடா வனப்பகுதியில் மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் நடத்திய பயங்கரத் தாக்குதலில் 75 சிஆர்பிஎப் ஜவான்கள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மாவோயிஸ்டுகளுக்கு தக்க பதிலடி தரப்படும் என உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை ராய்ப்பூருக்கு வந்து சேர்ந்தார் ப.சிதம்பரம். பின்னர் ஜக்தால்பூர் சென்ற ப.சிதம்பரம் அங்கு தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் ஜவான்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
வீரர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த சவப் பெட்டிகள் இருந்த இடத்திற்கு முகத்தில் சோகம் தெறிக்க அமைதியாக நடந்து சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் சிதம்பரம். நிகழ்ச்சியில், முதல்வர் ரமன் சிங், சிஆர்பிஎப் டைரக்டர் ஜெனரல் விக்ரம் சிங், நக்சலைட் நடவடிக்கைகளுக்கான சிஆர்பிஎப் டெரக்டர் ஜெனரல் விஜய் ராமன், டிஜிபி விஷ்ஸ ரஞ்சன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கப் பின்னர் அனைத்து வீரர்களின் உடல்களும் அவரவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு வீடுகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
கொல்லப்பட்ட ஜவான்களில பெரும்பாலானோர் உ.பி, மகாராஷ்டிரா, பீகார் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் உ.பியைச் சேர்ந்தவர்கள் மட்டும் 44 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் பேசுகையில்,
மத்திய அரசின் மீது போரைத் திணிக்கிறது மாவோயிஸ்ட் இயக்கம். ஆனால் நக்சலைட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கைகளில் முன்பை விட வேகமாக செயல்படுவோம். அதில் எந்தத் தொய்வும் இருக்காது.
அரசுகளை எதிரியாக அறிவித்துள்ளது நக்சலைட்டுகள்தான். இந்த மோதலை ஒரு போராக அவர்கள் கருதிக் கொள்கிறார்கள். இது போராகவே இருக்குமானாலும் கூட அதில் நாங்கள்தான் வெல்வோம். அவர்களை வெல்ல விட மாட்டோம்.
நக்சலைட்டுகளை ஒழிக்க ராணுவம் பயன்படுத்தப்பட மாட்டாது. புற ராணுவப்படையினரும், காவல்துறையினருமே போதுமானது. தற்போது விமானப்படையினரையோ அல்லது போர் விமானங்களையோ நக்சலைட் ஒழிப்புப் போன்றவற்றுக்குப் பயன்படுத்தக் கூடாது என்று விதி உள்ளது. ஆனால் தேவைப்படுமானால் இந்த விதியில் சிறு மாற்றம் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கப்படும்
ஆந்திராவில் ராணுவத்தைப் பயன்படுத்தாமலேயே நக்சலைட்களை மாநில காவல்துறையினரே ஒழித்துள்ளனர். எனவே அது பிற மாநிலங்களிலும் கடைப்பிடிக்கப்படும்.
சட்டிஸ்கர் தாக்குதலுக்கு கவனக்குறைவும் ஒரு காரணம். இனி விழிப்புடன் பாதுகாப்புப் படையினர் இருப்பார்கள். மாவோயிஸ்ட் நக்சலைட்டுகளுக்கு வெற்றி கிடைக்காது. அவர்களை வெற்றி பெறவும் விட மாட்டோம். இந்தத் தாக்குதலுக்கு நிச்சயம் சரியான பதிலடியைக் கொடுப்போம் என்றார் ப.சிதம்பரம்.
பின்னர் முதல்வர் ரமன் சிங் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார் ப.சிதம்பரம்.












Click it and Unblock the Notifications