விலைவாசி உயர்வுக்குக் கண்டனம்- தமிழகம் முழுவதும் இடதுசாரி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சென்னை: விலைவாசி உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று இடதுசாரி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்த ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
விலைவாசி உயர்வைக் கண்டித்து இன்று நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்திலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை, கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் நடந்த மறியல் போராட்டத்தில் சிபிஎம் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சாலையில் அமர்ந்து அவர்கள் கோஷமிட்டனர். பின்னர் அவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.
மதுரையில் நடந்த போராட்டத்தில் கோரிப்பாளையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இப்போராட்டத்தில் பெண்கள் காய்கறி மாலை போட்டபடி பங்கேற்றனர்.
நெல்லையில், ஜங்ஷன் ரயில் நிலைய சந்திப்பு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்ட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் நடந்த போராட்டத்திற்கு எம்.பி. நடராஜ் தலைமை தாங்கினார். நகரில் 1300 பேரும், புறநகர்ப் பகுதியில் 1000 பேரும் கைதாகினர்.
சட்டசபைக்கு வெளியே சாலை மறியல்
இந்த நிலையில் மின்வெட்டைக் கண்டித்து இடதுசாரி கட்சி எம்.எல்.ஏக்கள் இன்று சட்டசபையிலிருந்து வெளியேறி கலைவாணர் அரங்க சாலையில் மறியல் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் அவர்களைத் தடுத்துக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications