சட்டிஸ்கரில் கொல்லப்பட்ட 3 தமிழக சிஆர்பிஎப் வீரர்களின் இறுதிச் சடங்கு – மக்கள் கண்ணீர் அஞ்சலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டிஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெறியாட்டத்தில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த 3 சிஆர்பிஎப் வீரர்களுக்கு இன்று இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

தான்டேவாடா மாவட்டம் முக்ரானா வனப்பகுதியில் நடந்த கொடூரத் தாக்குதலில் சிஆர்பிஎப்பைச் சேர்ந்த 76 ஜவான்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் மூன்று பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்களில் மோகன ரங்கன் (44) சென்னை கொளத்தூர் பூம்புகார் நகரைச் சேர்ந்தவர். விஜயக்குமார் (36) கன்னியாகுமரி மாவட்டம் அனந்தமங்கலம் என்ற பகுதியைச் சேர்ந்தவர். சேகர் (36), வேலூர் மாவட்டம் கந்திலி அருகில் உள்ள தோக்கியம் கிராமத்தைச் சேர்ந்தவர்.

இன்று தமிழக சட்டசபையில் மூன்று பேரின் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இன்று காலை சட்டசபை கூடியதும் மூவரின் மரணத்திற்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் அவை நடவடிக்கைகள் தொடர்ந்தன.

இறுதிச் சடங்குகள்

முன்னதாக நேற்று சென்னைக்கு வந்து சேர்ந்த மோகன ரங்கன் மற்றும் சேகரின் உடல்கள் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சென்னை கொளத்தூரில் உள்ள வீட்டுக்கு மோகன ரங்கன் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு மக்கள் திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டம் கந்திலியை அடுத்த தோக்கியம் கிராமத்தைச் சேர்ந்த சேகரின் உடலுக்கு, வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திரன், காவல்துறை ஆணையர் அறிவுச் செல்வன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

விஜயகுமாரின் உடல் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து குமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள அனந்தமங்கலத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு விஜயகுமார் உடலுக்கு அமைச்சர் சுரேஷ் ராஜன், மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

டிஜிபி அஞ்சலி

முன்னதாக சென்னைக்குக் கொண்டு வரப்பட்ட 3 வீரர்களின் உடல்களுக்கு மாநில டிஜிபி லத்திகா சரண் மலர் வளையம் வைத்து சல்யூட் செய்து அஞ்சலி செலுத்தினார்.

நேற்று இரவு சேகர் மற்றும் மோகனரங்கனின் உடல்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இரவு 11 மணியளவில் விமானம் மூலம் இவை சென்னைக்கு வந்து சேர்ந்தன.

விமான நிலையத்தில் தமிழக காவல்துறை டிஜிபி லத்திகா சரண், கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன், சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட், சிஆர்பிஎப் டிஐஜி ஜப்ப்ர் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து சல்யூட் செய்து அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல தமிழக பாஜக முன்னாள் தலைவர் இல.கணேசன், தமிழிசை செளந்தர்ராஜன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

மோகனரங்கத்தின் உடலைப் பெற்றுக் கொண்ட அவரது தம்பி சிஆர்பிஎப் ஜீப்பில் கொளத்தூருக்குக் கொண்டு சென்றார். அவருடன் சிஆர்பிஎப் டிஐஜி ஜப்பாரும் உடன் சென்றார்.

இதேபோல சேகரின் உடலை ஆற்காடு தாசில்தார் பாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் பெற்றுக் கொண்டு தோக்கியம் கிராமத்திற்குக் கொண்டு சென்றனர்.

இன்னொரு வீரரான விஜயக்குமாரின் உடல் திருவனந்தபுரம் வழியாக கொண்டு செல்லப்பட்டது.

மோகனரங்கன் மரணத்தால், கொளத்தூர் பகுதி பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது. அவரது வீர தீரச் செயல்கள் குறித்து அங்குள்ளவர்கள் சிலாகித்துப் பேசினர். ஏற்கனவே மாவோயிஸ்டுகளுக்கு எதிரான சண்டையில் ஈடுபட்டவர் மோகன ரங்கன். 2 முறை மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் பங்கேற்றிருந்த மோகன ரங்கன் தற்போது 3வது முறையாக சட்டிஸ்கரில் மோதலில் ஈடுபட்டபோது மரணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3 வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிதியதவி

இதற்கிடையே, வீர மரணம் அடைந்த மூன்று சிஆர்பிஎப் ஜவான்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி அளிக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்த தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

சத்தீஷ்கார் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் பலியான மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 75 வீரர்களில், சென்னை கொளத்தூரைச் சேர்ந்த மோகனரங்கன், குமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள அனந்தமங்கலத்தைச் சேர்ந்த விஜயகுமார், வேலூர் மாவட்டம் கந்திலியை அடுத்த தோக்கியம் கிராமத்தைச் சேர்ந்த சேகர் ஆகிய மூன்று வீரர்களும் இறந்த சம்பவம் குறித்து அறிந்த முதல்வர் கருணாநிதி, இறந்த அனைவரின் குடும்பத்தாருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளார்.

அத்துடன், நக்சலைட்டுகளின் தாக்குதலில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த இந்த மூவரின் குடும்பங்களுக்கும் தலா 5 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 15 லட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிவாரண உதவியாக உடனடியாக வழங்கிட முதல்வர் கருணாநிதி நேற்று உத்தரவிட்டு உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+