Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாடு முழுவதும் உழவர் சந்தைகளை அமைக்க மு.க.ஸ்டாலின் யோசனை

Subscribe to Oneindia Tamil

Stalin
டெல்லி: விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகளைத் தீர்க்க நாடு முழுவதும் உழவர் சந்தைகளை அமைத்து காய்கறி உள்ளிட்டவற்றை குறைந்த விலையில் மக்களுக்குக் கிடைக்க வகை செய்யலாம் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் யோசனை தெரிவித்துள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கால் நியமிக்கப்பட்ட பத்து மாநில முதல்வர்களின் கூட்டம் நேற்று டெல்லியில் பிரதமர் தலைமையில் நடந்த்து.

தமிழகத்தின் சார்பில் இதில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்

அப்போது அவர் பேசியதாவது:

விலைவாசியை குறைப்பதற்காக, இந்த குழுவை அமைத்து, அதில் எங்கள் முதல்வரை உறுப்பினராக நியமித்தமைக்கு பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அத்தியாவசிய உணவு பொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதை அறிவோம். அதன் விளைவாக, அத்தியாவசிய பொருள்களின் விலை குறையத் தொடங்கியுள்ளன.

உணவு, கோதுமை, சமையல் எண்ணை போன்றவற்றின் விலை ஏற்ற, இறக்கம் இல்லாமல் நிலையாக உள்ளது. சர்க்கரை விலை சற்று குறைந்துள்ளது. ஆனால் பருப்புகளின் விலையை குறைக்க முடியவில்லை. அவற்றின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தேவை மற்றும் இருப்பு அம்சத்தை வைத்து பார்க்கையில், அத்தியாவசிய பொருள்களின் விலை உயரக்கூடும் என்ற எண்ணம் இப்போது எழுந்துள்ளது. எனவே, உற்பத்தியை பெருக்க இந்த மையக்குழு தொலைநோக்கு திட்டத்தை தயாரிக்கும் நோக்கோடும், நியாய விலைக்கடைகளின் செயல்பாட்டை வலுப்படுத்தும் விதமாகவும் செயல்படவேண்டும். எங்கள் மாநிலத்தில் கிடைத்த அனுபவத்தை கொண்டு சில பரிந்துரைகளை இந்த குழுவுக்கு நான் தெரிவிக்க விரும்புகிறேன்.

உழவர் சந்தை அமைக்க வேண்டும்

எல்லா பண்டங்களையும் விட பருப்பின் விலை மட்டுமே பெரும் கவலை அளிப்பதாக உள்ளது. போதுமான உள்நாட்டு உற்பத்தி இல்லாததாலும், ஏற்றுமதியையே சார்ந்திருப்பதால் அவற்றின் விலை ஸ்திரமாக இல்லை. எனவே, உள்நாட்டு உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; பருப்பு வகைகளை முக்கிய பயிராக பயிரிடுவதை ஊக்குவிக்க வேண்டும். பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு சிறப்பு நடவடிக்கை குழு தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் குறைந்தபட்ச ஆதாய விலையை நன்றாக அதிகரித்து தரவேண்டும்.

மழையை நம்பியிருக்கும் இடத்தில் மட்டுமே பருப்பு நன்றாக விளைவதால், அதுபோன்ற இடங்களில் விளைச்சலை அதிகரிக்க சிறப்பு திட்டங்களை வகுக்கலாம்; அழுகக்கூடிய பொருட்களின் சில்லரை விற்பனை விலைக்கும், விவசாயிகள் நிர்ணயிக்கும் விலைக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. அதனால் தமிழகத்தில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையை போல் சந்தைகளை அமைக்கலாம். பருவகால மாற்றத்தை சமாளிக்கவும், உற்பத்தி செய்யப்படுபவை வீணாகுவதை குறைக்கும் வகையில் குளிர்பதன கிடங்குகளையும் அதிக அளவில் அமைக்கலாம்.

அரிசி அளவை கூட்ட வேண்டும்

பொதுவினியோக திட்டத்தை வலுப்படுத்துவதற்கு, வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்காக, மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கும் அரிசி அளவை அதிகரிக்க வேண்டும். இதனால், உணவுப்பொருளை பாதுகாக்கும் பிரச்சினை மத்திய நிறுவனங்களுக்கு குறையும். மாநில அரசுகளிடம் அதிக இருப்பு இருக்கவும் வழிகிடைக்கும்.

ஒவ்வொரு மாதமும், குறிப்பிட்ட அளவில் பருப்பு வகைகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கவேண்டும். நான் பரிந்துரைப்பது என்னவெனில், பருப்பு வகைகளை இறக்குமதி செய்து மத்திய அரசு கூடுதலாக ஆபத்துக்கால இருப்புபோல் வைத்துக் கொள்ளவேண்டும். வெளிச்சந்தையில் பருப்பு விலை அதிகரிக்கும்போது, நியாயவிலை கடைகளுக்கு அனுப்புவதற்கு பதிலாக வெளிச்சந்தையில் அந்த பருப்புகளை புழக்கத்துக்கு அனுப்பலாம்.

பொதுவினியோக திட்டத்தில் போலி கார்டுகளை தவிர்க்க பயோமெட்ரிக்' (விரல்ரேகை) குறியீட்டு முறை, நவீன கருவி மூலம் பில்' போடுவது போன்ற நவீன வழிமுறைகளைப் பின்பற்றினால், பொதுமக்களுக்கு எளிதான, விரைவான சேவை அளிக்கலாம். தமிழகமும் அதுபோன்ற திட்டங்களை பின்பற்ற தயாராக உள்ளது.

பொதுவினியோக துறையில் பயோமெட்ரிக்' முறை

மக்கள் தொகை கணக்கெடுப்பை பயோமெட்ரிக்' முறையில் மேற்கொள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு டைரக்டர் ஜெனரல் திட்டமிட்டுள்ளார். இந்த பணியினை, மத்திய, மாநில அரசுகள் இணைந்து தரமான முறையில் ஒரே நேரத்தில் மேற்கொண்டால், பணிச்சுமை பாதியாக குறையும். இதற்கான செலவினை பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம். பொதுவினியோக துறையில் இது நல்ல பலனை ஏற்படுத்தும்.

மாநில அரசுகளுக்கு தேவைப்படும் இடத்தில் சேமிப்பு கிடங்குகளை கட்ட தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய தயங்குகின்றன. எனவே, சேமிப்பு கிடங்குகளை உருவாக்குவதற்கு, மாநில சேமிப்பு கிடங்கு நிறுவனங்கள், மாநில உணவுப்பொருள் வழங்கல் துறை மற்றும் கூட்டுறவுத்துறைகளுக்கு 50 சதவீத மானியத்துடன் மத்திய அரசு நிதிஉதவி வழங்கவேண்டும் என்றார் ஸ்டாலின்.

கூட்டத்தை முடித்துக் கொண்ட ஸ்டாலின் நேற்று இரவே சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

அத்தியாவசிய உணவு பொருள்களின் விலைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் கருணாநிதி சில யோசனைகளை தெரிவித்து இருந்தார். அவற்றை முதல்வர்கள் கூட்டத்தில் தெரிவித்தேன்.

10 மாநில முதல்-அமைச்சர்களின் கருத்துக்களையும் கேட்ட பிரதமர் மன்மோகன்சிங், அவற்றின் அடிப்படையில் விலைவாசி உயர்வை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இன்னும் 11/2 மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார் என்றார்.

நேற்றைய கூட்டத்தில் தமிழகம் தவிர ஆந்திரா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், அஸ்ஸாம், ஹரியானா, சட்டிஸ்கர், குஜராத், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் முதல்வர்களும் கலந்து கொண்டனர். மத்திய அரசின் தரப்பில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார், திட்டக் கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

உழவர் சந்தை திமுக அரசால் கடந்த 1999ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முன்னோடித் திட்டங்களில் ஒன்றாகும். அதன்படி விவசாயிகள் தங்களது விளை பொருட்களை நேரடியாக இங்கு கொண்டு வந்து விற்கலாம். இதன் மூலம் அவர்களுக்குரிய விலை நியாயமாகவும், இடைத் தரகர்களின் இடையூறு இன்றியும் கிடைக்கும். அதேசமயம், நுகர்வோருக்கும் குறைந்த விலையில் தரமான காய்கறி உள்ளிட்டவை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் இந்த உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+