234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பொதுக்கூட்டம் நடத்த ஜெ. உத்தரவு

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, கடுமையான மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீரழிவு, வேளாண் மற்றும் தொழில் உற்பத்தியில் பின்னடைவு, வேலையில்லாத் திண்டாட்டம், குடிநீர்ப் பற்றாக்குறை, நதிநீர்ப் பிரச்சினை என மக்களை அன்றாடம் பாதிக்கக் கூடிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையிலான திட்டங்கள் தி.மு.க. அரசின் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவில்லை.
மாறாக, மக்களை ஏமாற்றும் வகையில், கவர்ச்சிகரமான காகிதத் திட்டங்கள் தான் இடம் பெற்றிருக்கின்றன. இது, தி.மு.க. அரசின் மக்கள் விரோதப்போக்கையே காட்டுகிறது.
எனவே, தி.மு.க. அரசின் மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையைக் கண்டித்தும், நிர்வாக சீர்கேட்டைக் கண்டித்தும் வருகின்ற 22ந் தேதி முதல் 24ந் தேதி வரை மூன்று நாட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தொகுதிக்கு இரண்டு இடங்களில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மாவட்டக் கழகச் செயலாளர்களும், மாவட்டக்கழக நிர்வாகிகளும் தங்கள் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளைக் கழகப் பொறுப்பாளர்களுடனும் மற்றும் எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற் சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி மற்றும் இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை உள்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புப் பிரதி நிதிகளுடனும் இணைந்து, தங்கள் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்பு கொண்டு, பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications