ராஜினாமா செய்து பொறுப்பைத் தட்டிக் கழிக்கக் கூடாது சிதம்பரம் -பாஜக
டெல்லி: மாவோயிஸ்ட் நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை உறுதியுடன் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தொடர வேண்டும். நாட்டு மக்களைக் காக்கும் பணியிலிருந்து அவர் விலகக் கூடாது என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
தான்டேவாடா படுகொலைக்குப் பொறுப்பேற்பதாக நேற்று தெரிவித்த ப.சிதம்பரம், மத்திய உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலக விரும்புவதாக பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி கருத்து தெரிவிக்கையில், இந்த நேரத்தில் உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதை ஏற்க முடியாது.
இந்த நேரத்தில் ப.சிதம்பரம் பதவி விலகினால், அதை தங்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக நக்சலைட்கள் கருதி விடுவார்கள். அதை சாதகமாக எடுத்துக் கொண்டு மேலும் வன்முறைச் செயல்களில் ஈடுபடுவார்கள். இதை நாம் நக்சலைட்டுகளுக்குக் கொடுத்து விடக் கூடாது.
உள்துறை அமைச்சர் பதவி விலகக் கூடாது. நக்சலைட் ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகளில் அவர் உறுதியுடன் செயல்பட வேண்டும். நாட்டு மக்களையும், நாட்டையும் காக்கும் பொறுப்பு அவரிடம் உள்ளது. அதிலிருந்து அவர் விலக முயலக் கூடாது.
போர்க்களத்தில் பின்னடைவு ஏற்பட்டால் போர் வீரன் பின்வாங்கி ஓடி விடக் கூடாது. மாறாக, முன்நோக்கிச் சென்று போராடி வெற்றி பெற வேண்டும். அது சிதம்பரத்திற்கும் பொருந்தும். தற்போதைய நிலையை மிகவும் உறுதியுடன் சந்திக்க அவர் முன்வர வேண்டும்.
உண்மையில் இன்றைய நிலைகளுக்கு ப.சிதம்பரத்தின் சொந்த முடிவுகளும், செயல்பாடுகளும்தான் காரணம். மேற்கு வங்கத்திற்கு பயணம் செய்து லால்கரில் ஆய்வு மேற்கொண்டபோது, மேற்கு வங்க முதல்வர்தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றார். ஆனால் இப்போது சட்டிஸ்கரில் நடந்துள்ள தாக்குதலைத் தொடர்ந்து பதவியிலிருந்து விலகி விட முடிவு செய்கிறார். இது முரண்பாடாக தெரியவில்லையா அவருக்கு.
நக்சலைட்டுகளுக்கு எதிரான போரில் மாநில அரசுகளுடன் இணைந்து அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்ய வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. அந்தப் பொறுப்பிலிருந்து ப.சிதம்பரம் விலக்க் கூடாது. நக்சலைட்டுகளுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாஜகவின் முழு ஆதரவு உண்டு என்றார் ரூடி