இலங்கை தேர்தல்: ராஜபக்சே கூட்டணிக்கு வெற்றி - தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 12 எம்.பிக்கள்
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் முக்கால்வாசி வெளியாகி விட்டது. இதுவரை 186 தொகுதிகளின் (மொத்தம் 225) முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதில் ராஜபக்சே கூட்டணிக்கு 127 இடங்கள் கிடைத்துள்ளன. ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கூட்டணிக்கு 51 இடங்கள் கிடைத்துள்ளன. 3வது இடத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றுள்ளது. அந்தக் கூட்டணிக்கு 12 இடங்கள் கிடைத்துள்ளன. இந்த 12 இடங்களுமே தமிழர் பூமியான வட கிழக்கிலிருந்து கிடைத்தவையாகும்.
பொன்சேகா கூட்டணிக்கு 4வது இடமே கிடைத்துள்ளது. இந்தக் கூட்டணி உள்ளிட்ட மற்றவர்கள் 5 இடங்களில் மட்டுமே வென்றுள்ளனர்.
ரணில் தலைமையிலான பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு இதுவரை சந்தித்திராத மிகப்பெரிய தோல்வியாக இந்த தேர்தல் முடிவு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனிப்பெரும் பிரதிநிதி
தமிழர் பகுதிகளான வட கிழக்கில் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பே முதலிடம் பிடித்துள்ளது. மற்ற தமிழ்க் கட்சிகள் கிட்டத்தட்ட நிராகரிக்கப்பட்டுள்ளன. ஈபிஆர்எல்எப், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈராஸ், புளாட் உள்ளிட்டவை ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. மக்கள் இந்தக் கட்சிகளை முழுமையாக நிராகரித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 5 எம்.பிக்கள் கிடைத்துள்ளனர். இங்கு ராஜபக்சே கூட்டணிக்கு 3 இடங்களும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு 1 இடமும் கிடைத்துள்ளன.
வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலா 3 சீட்கள் கிடைத்துள்ளன. வன்னியில் ராஜபக்சே கூட்டணிக்கு 2 இடங்களும், ரணில் கூட்டணிக்கு ஒரு இடமும் கிடைத்துள்ளன. மட்டக்களப்பில் ராஜபக்சே, ரணில் கூட்டணிகளுக்கு தலா ஒரு இடம் மட்டுமே கிடைத்துள்ளது.
திகடுமல்ல மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு இடம் கிடைத்துள்ளது.
சம்பந்தன் மகிழ்ச்சி
தேர்தல் முடிவுகள் குறித்து சம்பந்தன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். எதிர்பார்த்த அளவுக்கு சீட்கள் கிடைக்கவில்லை என்றாலும் கூட இதனால் மகிழ்ச்சி இல்லை என்று கூற முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையை மட்டுமே தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். மற்றவர்களை அவர்கள் நிராகரித்துள்ளனர் என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பையும், அதன் கொள்கைகளையும் தமிழ் மக்கள் ஆதரிக்கிறார்கள். எங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறார்கள் என்பதையே இந்த முடிவு காட்டுவதாக சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே விளங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.