காலாவதி மருந்து – சென்னையில் போலி டாக்டர் உள்பட 3 பேர் கைது
சென்னை: காலாவதியான அலோபதி மருந்தை நோயாளிகளுக்குக் கொடுத்த போலி டாக்டர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலாவதி மருந்துகளை விற்போர், விநியோகிப்போர் ஆகியோரை போலீஸார் தொடர்ந்து வலை வீசிப் பிடித்து வருகின்றனர். இந்த வழக்கில் தினசரி சிலர் கைதாகி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று மேலும் 3 பேர் சிக்கியுள்ளனர். சென்னையில் ஹோமியோபதி மருத்துவம் பார்த்து வந்த டேவிட்சன் என்பவர் காலாவதியான அலோபதி மருந்துகளை நோயாளிகளுக்குக் கொடுத்து வந்த்து கண்டுபிடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், அவர் போலி டாக்டர் என்பது தெரிய வந்த்து. இவருக்கு காலாவதியான அலோபதி மருந்துகளை விநியோகித்து வந்த மருந்து விற்பனைப் பிரதிநிதி அறிவரசு என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இதேபோல கடலூரில் காலாவதியான மருந்துகள் விற்பனை வழக்கில் செல்வக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் சிவகாசியைச் சேர்ந்தவர். போலி மற்றும் காலாவதி மருந்துகளுக்கான லேபிள் அச்சடித்து வந்தவர் இவர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
11 பேருக்கு குண்டாஸ்
இதற்கிடையே, காலாவதி மருந்து மற்றும் போலி மருந்து குற்றவாளிகள் 11 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
மீனா ஹெல்த்கேர் அதிபர் மீனாட்சிசுந்தரம், மீனாட்சிசுந்தரத்தின் தம்பி மாணிக்கம், பிரதீப் சோர்டியா, சேகர், ரவி, வெங்கடேசன், கோவேந்தன், கிருபாகரன், விஜயகுமார், ராமகிருஷ்ணன், ஜான் பாஷா ஆகிய இந்த 11 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதன் மூலம் இவர்கள் 11 பேரும் ஒரு ஆண்டு வரை ஜாமீனில் வெளிவர முடியாது.
இவர்களில் கோவேந்தன், கிருபாகரன், விஜயகுமார், ராமகிருஷ்ணன் ஆகியோர் மீனாட்சிசுந்தரத்தின் மருந்து கம்பெனியில் வேலைபார்த்த என்ஜினீயர்கள் ஆவார்கள்.
முன்னதாக மீனாட்சிசுந்தரம், சஞ்சய்குமார், பிரதீப் சோர்டியா, சேகர் உள்பட முக்கிய குற்றவாளிகள் 7 பேரை நேற்று மாலை எழும்பூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள்.
அப்போது குற்றவாளிகளுக்கு எதிராக அங்கு திரண்டு நின்ற ஏராளமான வக்கீல்கள் கோஷம் போட்டனர்.
கோர்ட்டை விட்டு அவர்களை வெளியே அழைத்து வந்தபோது அங்கு திரண்டு நின்ற ஏராளமான வக்கீல்கள் அவர்களை பார்க்க முற்பட்டனர்.
போலீசார் அரண்போல் நின்று பாதுகாப்பாக அழைத்து சென்றனர். திடீரென்று குற்றவாளிகள் மீது அழுகிய முட்டைகளும், செருப்புகளும் வீசப்பட்டன. எழும்பூர் கோர்ட்டில் ஒரே பரபரப்பாக காணப்பட்டது.












Click it and Unblock the Notifications