குரூப் 2 வினாத்தாள் லீக் ஆனதாக பரபரப்பு - டிஎன்பிஎஸ்சி தலைவர் மறுப்பு
ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் செல்லமுத்து மறுத்துள்ளார்.
நாளை தமிழகத்தில் குரூப் 2 தேர்வு நடைபெறவுள்ளது. இதை 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர். இந்த நிலையில் தஞ்சைக்கு வந்த வினாத்தாள் கட்டுக்களில் ஒன்று காணாமல் போய் விட்டதாக பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கருணாகரன் கூறுகையில்,
நாளை நடைபெறவுள்ள குரூப் 2 தேர்வுக்கான வினாத்தாள் கட்டுகளில், 79 கட்டுகள் தஞ்சைக்கும், கும்பகோணத்திற்கு 42 கட்டுகளும், பட்டுக்கோட்டைக்கு 22 கட்டுகளும் தரப்பட்டுள்ளன.
இந்த கட்டுகள் அனைத்தும் பாதுகாப்பாக பெறப்பட்டு அந்ததந்த தேர்வு மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அதை இன்று காலை சரிபார்த்து, அனைத்தும் சரியாக உள்ளது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்வாணையத்திற்கும் அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குரூப் 2 வினாத்தாள் வெளியாகிவிட்டது என்ற செய்தி வெறும் வதந்தி என்றும் திட்டமிட்டபடி நாளை குரூப் 2 தேர்வு நடைபெறும் என்றார்.
இதேபோல வினாத்தாள் வெளியானதாக வெளியான தகவல் தவறு என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் செல்லமுத்துவும் மறுத்துள்ளார்.