ஜெர்மனி செல்லும் விமானத்தில் கோளாறு - சென்னையில் பயணிகள் ஆவேசம்
சென்னை: ஜெர்மனி செல்ல இருந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பல மணி நேரம் அவதிக்குள்ளானார்கள்.
நேற்று முன்தினம் இரவு 11.45 மணிக்கு பிராங்க்பர்ட் நகரில் இருந்து லுப்தான்சா விமானம் 223 பயணிகளுடன் சென்னை விமான நிலையத்துக்கு வந்தது.
விமானம் சென்னையில் தரை இறங்கி பயணிகள் இறங்கும் பகுதிக்கு வந்தபோது விமானத்தின் முன்சக்கரத்தில் பழுது ஏற்பட்டது. பின்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் பயணிகள் பத்திரமாக இறக்கப்பட்டனர்.
மீண்டும் இந்த விமானம் 1.45 மணிக்கு ஜெர்மனி வழியாக அமெரிக்கா புறப்பட்டு செல்ல வேண்டும் என்பதால், பயணம் செய்ய இருந்த 187 பயணிகள் சுமார் 3 மணி நேரத்திற்கு முன்பே வந்து சோதனைகளை முடித்து காத்திருந்தனர்.
ஆனால் விமானத்தில் பழுது ஏற்பட்டதால் சிறிது நேரம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டனர்.
விமானத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்வதற்கான உதிரி பாகங்கள் சென்னையில் இல்லாததால் ஜெர்மனியில் இருந்து கொண்டுவர முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகளிடம் விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் 7 மணி நேரமாக காத்து இருந்தவர்களிடம் விமானம் திடீரென ரத்து என்று அறிவிக்கப்பட்டதால், பயணிகள் ஆவேசம் அடைந்தனர்.
பின்னர் பயணிகள் சென்னையில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். ஒரு சிலர் பயணத்தை ரத்து செய்து விட்டு சென்றனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெர்மனியில் இருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் பழுது அடைந்த சக்கரத்தின் உதிரி பாகம் கொண்டு வரப்பட்டு சரி செய்யப்பட்ட பின், இன்று (ஞாயிற்றுக்கிழமை) அந்த விமானம் ஜெர்மனிக்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications