தண்ணீர் தீவிரவாதத்தில் ஈடுபடுகிறது இந்தியா– லஷ்கர் புதுப் புகார்
லாகூர்: இந்தியா தண்ணீர் தீவிரவாதத்தில் ஈடுபட்ட்டு வருகிறது. இதை அது நிறுத்திக் கொள்ளாவிட்டால் தண்ணீருக்காக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டாலும் வியப்பதற்கில்லை என்று கூறியுள்ளார் லஷ்கர் இ தொய்பா நிறுவனரான ஹபீஸ் முகம்மது சயீத்.
மும்பை தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடைய சயீத் மீது நடவடிக்கை எடுக்குமாறு தொடர்ந்து இந்தியா வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் சயீத் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடி வருகிறார்.
இநத நிலையில், இந்தியா மீது புதுப் புகாரை சுமத்தியுள்ளார் சயீத். மேலும் இந்தியா, பாகிஸ்தான் இடையே தண்ணீருக்காக போர் மூளும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் லாகூரில் உள்ள செளபர்ஜி என்ற மசூதியில் நடந்த கூட்டத்தில் பேசுகையில், இந்தியா, பாகிஸ்தான் இடையே அடுத்து தண்ணீருக்காகத்தான் சண்டை மூளும். இந்தியா தண்ணீர் தீவிரவாதத்தை கையில் எடுத்துள்ளது. அதை அது கைவிட வேண்டும். இல்லாவிட்டால் போரைத் தவிர்க்க முடியாது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஓடும் ஆறுகளை தனது பகுதிக்குள்ளேய இருக்குமாறு தடுத்து வருகிறது இந்தியா. அணைகளையும், கால்வாய்களையும் அது அமைத்து பாகிஸ்தானை பாலைவனமாக்க முயலுகிறது. இதனால் இப்பிராந்தியத்தின் அமைதி கெடும் அபாயம் எழுந்துள்ளது.
இந்தியாவின் இந்த செயல் தீவிரவாதத்திற்குச் சமம். இதை எதிர்த்து, இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மக்கள் திரள வேண்டும். அணைகள் கட்டுவதையும், ஆறுகளின் போக்கை மாற்றுவதையும் தடுத்து நிறுத்த முயல வேண்டும் என்றார் சயீத்.
சயீத்தின் லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கு சர்வதேச அளவில் தடை உள்ளதால் தனது அமைப்பின் பெயரை ஜமாத் உத் தவா என்று மாற்றி அதன் தலைவராக நீடிக்கிறார் சயீத் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications