பெங்களூர் போலீஸ் எண்கெளன்டரில் தமிழக ரெளடி சுட்டு கொலை
பெங்களூர்: பெங்களூரில் போலீசாருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட தமிழகத்தை சேர்ந்த ரெளடி சுட்டுக் கொல்லப்பட்டார்.
பெங்களூர் மாரத்தஹள்ளி பகுதியில் வசித்து வந்தவர் ஜான்சன் (34). தமிழகத்தைச் சேர்ந்த இவர் ரெளடித்தனத்தில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த 2006ம் ஆண்டு அல்சூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் புகுந்து பழனி என்பவரையும், மகாலட்சுமி லே-அவுட்டில் ரெளடி பைசர் என்பவபரையும் கொலை செய்துள்ளார் ஜான்சன்.
ஜான்சனை கைது செய்ய போலீசார் முயன்றதால் தமிழகத்தில் தலைமறைவாக இருந்து வந்தார்.
இந் நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னையில் இருந்து பெங்களூருக்கு ஜான்சன் காரில் வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜான்சனை பிடிக்க எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீஸாரும் கே.ஜி.ஹள்ளி, மகாதேவபுரா போலீஸாரும் தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தனர்.
அதிகாலை 4.30 மணிக்கு கே.ஜி.ஹள்ளி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட நாகவாரா ரிங்-ரோட்டில் ஜான்சனின் கார் வருவதை அறிந்த போலீசார் அங்கு விரைந்து காரை சுற்றி வளைத்தனர்.
அப்போது ஜான்சன் தனது துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டான். இதில், எச்.எஸ்.ஆர். லே-அவுட் இன்ஸ்பெக்டர் ராஜேஷின் கையில் குண்டு பாய்ந்தது.
இதையடுத்து போலீசார் திருப்பிச் சுட்டனர். இதில் ஜான்சனின் தலை, நெஞ்சு பகுதியில் 3 குண்டுகள் பாய்ந்தன. ரத்த வெள்ளத்தில் ஜான்சன் அந்த இடத்திலேயே மயங்கினார்.
போலீஸ்சார் ஜான்சனை அம்பேத்கார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்தார்.
சம்பவம் நடந்த இடத்தை பெங்களூர் போலீஸ் கமிஷனர் சங்கர் பித்ரி நேரில் பார்வையிட்டார்.












Click it and Unblock the Notifications