“நாவடக்கம் தேவை”: நிதின் கட்காரிக்கு கோவிந்தாசார்யா அறிவுரை
டெல்லி: நாவடக்கத்துடன் பேசுமாறு பாஜக தலைவர் நிதின் கட்காரிக்கு அக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த கோவிந்தாசார்யா அறிவுரை கூறியுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான கோவிந்தாசார்யா கட்சியில் ஏற்பட்ட அதிகாரப் போட்டி காரணமாக விலகினார்.
இந் நிலையில் அவர் மீண்டும் பாஜகவில் சேர இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக பாஜக தலைவர் நிதின் கட்காரி கூறியுள்ள கருத்துக்களுக்கு கோவிந்தாசார்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கட்காரிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தை நிருபர்களிடம் வழங்கினார். அதில், பாஜகவுக்குத் திரும்ப வேண்டும் என்ற எண்ணம் எதுவும் எனக்கு இல்லை. என்னை பற்றி கட்காரியும் பாஜகவினரும் தேவையில்லாத விஷயங்களை கூறி வருகின்றனர். இதை உடனே நிறுத்திக் கொள்வது நல்லது.
நான் ஒரு மூத்த தலைவர் என்பதை மனதில் கொண்டு எதையும் பேச வேண்டும். குறிப்பாக நாவடக்கத்தோடு நடந்து கொள்ள அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
பாஜகவின் உள் விவகாரங்களில் என்னை சம்பந்தப்படுத்தி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் உமா பாரதியின் குருவாகக் கருதப்படுபவர் கோவிந்தாச்சாரியா என்பது குறிப்பிடத்தக்கது.
ராஷ்ட்ரீய ஸ்வபிமான் அந்தோலன் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருந்த கோவிந்தாச்சாரியா சமீபத்தில் அந்தப் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து அவர் மீண்டும் பாஜகவுக்குத் திரும்பலாம் என்ற செய்தி பரவியது குறிப்பிடத்தக்கது.
ஆதரவாளர்கள் புறக்கணிப்பு-அத்வானியும் கோபம்:
இந் நிலையில் சமீபத்தில் பாஜகவுக்கு அகில இந்திய அளவில் புதிய நிர்வாகிகளை நிதின் கட்காரி நியமித்தார். அதில் தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படாததல் கட்சியில் பல்வேறு தரப்பினரிடம் அதிருப்தி நிலவி வருகிறது.
மேலும் அத்வானியின் ஆதரவாளர்களையும் கட்காரி புறக்கணித்துள்ளதாக அவரது தரப்பும் கோபத்தில் உள்ளது.
சமீபத்தில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டபோது அத்வானி ஆதரவாளர்களை கட்காரி ஓரம் கட்டிவிட்டதால் அவர் எரிச்சலில் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதனால் சமீபகாலமாக பாஜகவின் முக்கிய கூட்டங்களை அத்வானி புறக்கணிக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் நடந்த பாஜகவின் 30வது ஆண்டு விழாவுக்கும் அத்வானி வரவில்லை.
அதேபோல புதிய தேசிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் பாஜக நிர்வாகிகளை பாராட்டி பேசவும் அத்வானி மறுத்துவிட்டார்.
பாஜகவில் இருந்து பிரிந்து சென்று தனிக்கட்சி தொடங்கிய உமாபாரதியை மீண்டும் கட்சியில் சேர்க்க அத்வானி சம்மதம் தெரிவித்தும் கூட கட்காரி அதைக் கண்டு கொள்ளவில்லை. இதுவும் அத்வானியின் கோபத்துக்கு இன்னொரு காரணம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications