அமைச்சர்-ஓபி வாக்குவாதம்: தரையில் அமர்ந்த எம்எல்ஏ
சென்னை: கரும்பு விலை தொடர்பாக எழுந்த விவாதத்தில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கும், எதிர்கட்சித் தலைவர் ஓ.பன்னீர்செல்வதுக்கும் இடையே சட்டசபையில் கடும் வாக்குவாதம் நடந்தது.
தமிழக சட்டசபையில் இன்று விவசாய மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பதில் அளித்தார்.
அப்போது கரும்பு விலை குறித்து பேசிய அமைச்சர், 'கரும்புக்கு மத்திய அரசு என்ன விலை நிர்ணயித்ததோ அதே விலை தான் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது.
அதற்கும் மேலாக மாநில அரசு கூடுதல் விலை எதையும் வழங்கவில்லை. 2005ம் ஆண்டு 9.5 சதவீத பிழித்திறன் கொண்ட கரும்புக்கு விலை டன்னுக்கு ரூ.1014 என அறிவிக்கப்பட்டது.
அதுவும் திமுக ஆட்சி வந்த பிறகு தான் வழங்கப்பட்டது' என்று அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், 'அமைச்சர் உண்மைக்கு மாறான தகவலை தெரிவிக்கிறார். ஒரு நாள் ஒரேயொரு தகவலை தவறாக கூறியதற்காக எங்கள் கட்சி அதிமுக உறுப்பினர் விஜயகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஆனால் அமைச்சர் இப்படி தினமும் தவறான தகவல்களை தெரிவிக்கிறார். இதற்கு என்ன தீர்ப்பு?
அதிமுக ஆட்சியில் தனியார், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் ரூ.1000க்கும் மேல் கரும்புக்கு விலை வழங்கப்பட்டது' என்று சில புள்ளி விவரங்களை குறிப்பிட்டார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், 'உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த தகவல்களையும் சபாநாயகரிடம் தரட்டும். நான் அளித்த தகவல்களையும் சபாநாயகரிடம் தருகிறேன்.
இவற்றை ஆராய்ந்து எது தவறான தகவல் என்று சபாநாயகர் தீர்ப்பு சொல்லட்டும். நான் சொன்னது தவறான தகவல் என்றால் சபாநாயகர் கூறும் தீர்ப்புக்கு கட்டுப்படுகிறேன்.
ஓ.பன்னீர்செல்வம் கூறியது தவறான தகவல் என்றால் அவரை ஒருநாள் சஸ்பெண்ட் செய்வீர்களா' என்றார்.
தரையில் உட்கார்ந்த அதிமுக எம்.எல்.ஏ:
இந் நிலையில் சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏ. சபாநாயகர் முன்பு தரையில் உட்கார்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேசிக் கொண்டிருந்தபோது முன்னாள் அமைச்சரும், அதிமுக எம்.எல்.ஏவுமான பாண்டுரங்கன் குறுக்கிட்டுப் பேச அனுமதி கேட்டார்.
அமைச்சர் பேசிய பிறகு வாய்ப்பு அளிப்பதாக சபாநாயகர் கூறினார். ஆனால், அமைச்சர் பேசி முடித்த பிறகும் அவருக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாண்டுரங்கன் சபாநயாகர் முன்பு வந்து தரையில் உட்கார்ந்தார்.
நடவடிக்கை எடுப்பேன் என்று சபாநாயகர் எச்சரித்ததையடுத்து எழுந்து சென்றார். அவரை ஓ.பன்னீர் செல்வமும் சமாதானப்படுத்தினார்.












Click it and Unblock the Notifications