மே 3ல் பி.இ; 17ல் எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்கள்
சென்னை: தமிழகத்தில் நடப்புக் கல்வியாண்டில் (2010-11) எம்.பி.பி.எஸ் மற்றும் பல் மருத்துவப் படிப்புக்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் மே 17ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளன.
இந்த இரு படிப்புகளுக்கும் சேர்த்து ஒரே விண்ணப்பம் வினியோகிக்கப்படும். சென்னையில் உள்ள 3 கல்லூரிகள், செங்கல்பட்டு, வேலூர், திருச்சி, மதுரை, தேனி, சேலம், கோவை, தருமபுரி, தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 15 அரசு மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும்.
இதற்காக 16,000 விண்ணப்பங்களை அச்சடிக்க மருத்துவக் கல்வி தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது. விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சமர்பிக்க கடைசி தேதி மே 27 ஆகும்.
விண்ணப்பக் கட்டணம் ரூ.500 ஆகும். 15 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் 1,483 பேர் எம்பிபிஎஸ் படிப்பிலும், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் 85 மாணவர்களும் சேர்க்கப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆய்வு செய்த பின் விண்ணப்பத் தகுதி அடிப்படையில் ஜூன் 7ம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கப்படும். அதைத் தொடர்ந்து ஜூன் 11ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும்.
ஜூன் 21ம் தேதி கவுன்சலிங்:
எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க சென்னை கீழ்ப்பாக்கத்தில் முதல் கட்ட கவுன்சலிங் ஜூன் 21ல் தொடங்கி ஜூலை 7ம் தேதி முடிவடையும்.
விழுப்புரம், திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் இன்னும் அனுமதி அளிக்கவில்லை. இந்த அனுமதி கிடைத்தால் இங்கும் தலா 100 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்க முடியும்.
இந்த ஒப்புதலைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
மே 3ம் தேதி முதல் பி.இ. விண்ணப்பங்கள்:
அதே போல தமிழகத்தில் இந்தக் கல்வியாண்டில் (2010-11) பி.இ. படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே 3ம் தேதி விண்ணப்ப வினியோகம் தொடங்குகிறது.
ஜூன் 28ம் தேதி முதல் ஜூலை 25ம் தேதி வரை பி.இ. கவுன்சலிங் நடக்கவுள்ளது. இந்த ஆண்டும் மாணவர்களின் வசதிக்காக பி.இ. கவுன்சலிங்குக்கு முன்னதாகவே எம்.பி.பி.எஸ். கவுன்சலிங் நடந்து முடியவுள்ளது.
இந்தத் தகவல்களை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலாளர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி ஆகியோர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications