6வது முறையும் தமிழக முதல்வராவார் கருணாநிதி -திருமாவளவன்
சென்னை : ஆறாவது முறையும் முதல்வர் பதவிக்கு கருணாநிதி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.
மறைமலைநகர் விருது விழாவுக்குத் தலைமை தாங்கி அவர் பேசுகையில்,
தலித் மக்களின் மேம்பாட்டுக்காக முதல்வர் கருணாநிதி ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி சாதனை படைத்துள்ளார். அருந்ததியின மக்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கியதற்காகத்தான் அவருக்கு அம்பேத்கார் சுடர் விருதை வழங்கியுள்ளோம். இந்த நேரத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் சில கோரிக்கைகளை வைக்க விரும்புகிறேன்.
தேவேந்திர குலத்தை சேர்ந்த வீரன் சுந்தரலிங்கத்துக்கு நினைவு மண்டபமும், அயோத்திதாசர் பண்டிதர் மணிமண்டபமும் கட்டவேண்டும். இம்மானுவேல் சேகர் பெயரில் தபால் தலை வெளியிட வேண்டும். காயிதே மில்லத் பெயரில் தமிழக அரசு விருது வழங்கவேண்டும். பஞ்சமி நிலத்தை மீட்பதற்காக தனி ஆணையம் அமைக்க வேண்டும்.
புதிய சட்டப்பேரவை வளாகத்தில் அம்பேத்காருக்கும், பெரியாருக்கும் சிலை நிறுவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தலித் மக்களின் மேம்பாட்டுக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் முதல்வர் கருணாநிதியை 6-வது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்த்தி அழகு பார்ப்போம் என்றார் அவர்.
விழாவில் விருது பெற்ற தி.க. தலைவர் கி.வீரமணி பேசுகையில்,
சமுதாய விடுதலைக்கான போராட்டத்தில் திராவிடர் கழகம், தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இணைந்துள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது போன்ற புரட்சிகரமான திட்டங்களை முதல்வர் கருணாநிதி நிறைவேற்றி வருகிறார். ஆனால் அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற்று 6-வது முறையாக ஆட்சிக்கு வருவார்.
இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவே, முதல்வர் கருணாநிதியை மீண்டும் முதல்வராக்க மக்கள் தயாராக உள்ளனர். நாங்கள் இந்த ஆட்சிக்கு கவசமாக உள்ளோம். இந்த ஆட்சியை எந்த கொம்பனாலும் கவிழ்த்துவிட முடியாது என்பதை தெரிவிக்கும் வகையில் இந்த கூட்டம் அமைந்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications