சானியாவின் திருமணத்தால் அதிருப்தி – மகளுக்கு வைத்த சானியா என்ற பெயரை மாற்றிய தம்பதி
போபால்: சானியா மிர்ஸா மீது கொண்ட அன்பால் தங்களது மகளுக்கு சானியா என பெயர் வைத்த மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்துத் தம்பதி, சானியா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கைத் திருமணம் செய்து கொண்டதால் அதிருப்தி அடைந்து மகளுக்கு வைத்த பெயரை மாற்றி விட்டனர்.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியை சேர்ந்த இந்து தம்பதி கீதா-மதன்லால். இவர்களுக்கு கடந்த 2002-ம் ஆண்டு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த கால கட்டத்தில் சானியா புகழின் உச்சத்தில் இருந்தார்.
இதையடுத்து தனது மகளுக்கு சானியா என பெயர் வைத்தார் மதன் லால். தற்போது 7 வயதாகும் சானியா, 3ம் வகுப்பு படிக்கிறார்.
சமீபத்தில் சானியாவுக்க்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்குக்கும் திருமணம் நடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தார் மதன்லால். பாகிஸ்தான் வீரரைப் போய் சானியா மணந்துள்ளாரே என்ற அதிருப்தியில், தனது மகளுக்கு வைத்த பெயரை தற்போது சங்கீதா என மாற்றி விட்டார்.
இதுகுறித்து மதன்லால் தம்பதி கூறுகையில், சானியா ஒரு இந்திய வீரரை மணந்திருந்தால் பெரும் மகிழ்ச்சி அடைந்திருப்போம். ஆனால் நமது எதிரி நாட்டு வீரரைப் போய் அவர் மணந்ததால் வேதனை அடைந்தோம்.
நாட்டுப் பற்றுக்காகத்தான் சானியா என்ற பெயர் முஸ்லீம் பெயராக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் எங்களது மகளுக்கு வைத்தோம். ஆனால் அந்த நாட்டுப் பற்று சானியாவிடம் இல்லாமல் போய் விட்டது. அவருக்கு கொடுத்த அனைத்து சலுகைகளையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கூறினார் மதன்லால்.












Click it and Unblock the Notifications