ஐபிஎல் கொச்சி அணியின் நிர்வாகிகள் திடீர் மாற்றம்- ஹர்ஷத் மேத்தா புதிய தலைவர்
டெல்லி: பெரும் சர்ச்சைப் புயலில் சிக்கியுள்ள ஐபிஎல் கொச்சி அணியின் நிர்வாகிகள் திடீரென மாற்றப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் ஐபிஎல்லில் புதிதாக இணைந்த அணி கொச்சி. ஆனால் இந்த அணியை மையமாக வைத்து தற்போது பெரும் புயல் வீசி வருகிறது. இந்த நிலையில் கொச்சி அணியின் நிர்வாகிகள் திடீரென மாற்றப்பட்டுள்ளனர்.
ரெண்டஸ்வஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்தான் கொச்சி அணியை வாங்கியுள்ளது. தற்போது புதிய நிர்வாகிகளை அது அறிவித்துள்ளது.
துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஹர்ஷத் மேத்தா என்பவர் கொச்சி அணியின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல புதிய தலைமை செயலதிகாரியாக கேசவ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். முதலில் இப்பதவியில் இருந்தவர் சைலேந்திர கெய்க்வாட்.
ஹர்ஷத் மேத்தா, துபாயில் ரோசி ப்ளூ டயமண்ட் நிறுவனத்தின் தலைவராக இருந்து வருகிறார். ரெண்டஸ்வஸ் நிறுவனத்தில் இவருக்கு பங்கு எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2003ம் ஆண்டு முதல் தனது குடும்பத்தினருடன் துபாயில் வசித்து வருகிறார் மேத்தா. ஜெபல் அலி பகுதியில் இவரது அலுவலகம் அமைந்துள்ளது.
கொச்சி அணியின் நிர்வாகம், அதன் பங்குதாரர்கள் குறித்து பெரும் குழப்பங்கள் நிலவி வரும் நிலையில், புதிய நிர்வாகிகளை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications