மேட்டூரில் போலீசார் மீது பாமகவினர் தாக்குதல்: கலவரம்- துப்பாக்கிச் சூடு
மேட்டூர்: மேட்டூரில் போலீசார் மீது தாக்குதல் நடத்திய பாமகவினரைக் கலைக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் காயமடைந்தார்.
மேட்டூர் கருங்கலூர், காந்திநகர் ஆதிதிராவிடர் காலனி ஆகிய பகுதிகளில் பா.ம.கவினருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே சமீபகாலமாக தொடர் மோதல்கள் நடந்து வருகின்றன.
சில நாட்களுக்கு முன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரின் கொடிக் கம்பம் வெட்டி சாய்க்கப்பட்டது. இதையடுத்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி வருகின்றனர். இரு தரப்பும் போலீசாரிடம் புகார் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கருங்கல்லூரில் உள்ள பத்திரகாளியம்மன் கோயிலுக்கு மேளம் அடிப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கம் இடையே மீ்ண்டும் மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து பாமகவினர் நேற்று காந்தி நகரில் புகுந்து தாக்குதல் நடத்தி பல வீடுகளை சூறையாடினர். இது தொடர்பாக பாமகவை சேர்ந்த 3 பேரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இவர்களை உடனே விடுதலை செய்யக் கோரி அவர்களது உறவினர்களும், பாமகவினரும் சேலம்- மைசூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இதையடுத்து அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினர். ஆனால், அதை அவர்கள் ஏற்கவில்லை. இதையடுத்து போலீசாருக்கும் , மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது சிலர் போலீசார் மீது கல் வீசித் தாக்கினர். இதில் டிஎஸ்பி சிவானந்தா உள்பட 15 போலீசார் காயமடைந்தனர்.
இதையடுத்து வன்முறைக் கும்பலைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அந்த இடமே ரணகளமானது.
ஆனாலும் கூட்டத்தினர் கலைந்து போகாமல் போலீசாரை தாக்க முயற்சிக்கவே அவர்கள் வானத்தை நோக்கி 5 முறை துப்பாக்கியால் சுட்டனர். இதனையடுத்து கூட்டத்தினர் கலைந்து ஓடினர்.
போலீசார் சுட்டதில் கருங்கல்லூரை சேர்ந்த சாமித்துரை என்பவர் காயமடைந்தார். அவர் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சம்பவ இடத்தில் தொடர்ந்து பதட்டம் நீடிப்பதால், எஸ்.பி. மயில்வாகனன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போலீசார் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக இதுவரை 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காந்தி நகரில் கடந்த 27ம் தேதி விடுதலை சிறுத்தை கட்சியின் கொடிக் கம்பம் வெட்டி சாய்க்கப்பட்டது தொடர்பாக பாமக தலைவர் ஜி.கே.மணி உள்பட சிலர் மீது கொளத்தூர் போலீசார் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தது நினைவுகூறத்தக்கது.
இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த நடவடிகைகையும் போலீசார் எடுக்காத நிலையில் இரு கட்சியினரும் தொடர்ந்து மோதி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications