தமிழகத்தி்ல் 12,058 புதிய ஆசிரியர்கள் நியமனம்: அமைச்சர்
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கைகளை தாக்கல் செய்து அந்தத் துறைக்கான அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:
2010-2011ம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.10,147.56 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் திட்டப் பணிகளுக்கு ரூ.1,249.11 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2009-2010ம் ஆண்டு 12,058 ஆசிரியர் காலி பணி இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
5 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. 831 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 115 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும் 115 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
2,500 நடுநிலைப்பள்ளிகளுக்கு ரூ.50 கோடி செலவில் லேப்- டாப்கள் வழங்கப்பட்டுள்ளன. 303 அரசு உயர்நிலை- மேல்நிலை பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவதற்காக நபார்டு வங்கி நிதி ஒதுக்கியுள்ளது.
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்களின் ஆங்கில மொழி திறனை வளர்க்க ஆங்கில சிறுகதை புத்தகங்கள் உருவாக்கப்பட்டு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கு வழங்கப்படும்.
சத்துணவில் முட்டை வழங்கும் திட்டத்தின் கீழ் 41.66 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகிறார்கள். இலவச பாடநூல் வழங்கும் திட்டத்தில் 51 லட்சம் மாணவ- மாணவிகள் பயன்பெறுகிறார்கள்.
1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 1.34 லட்சம் பேருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதுபோன்று பள்ளிக் கல்வித்துறை வளர்ச்சிக்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது.
மாற்றுத்திறன் உடையவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. பார்வை குறைபாடு உடையோர் 626 பேரும், காதுகேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதோர் 639 பேரும் இதர குறைபாடு உடையோர் 445 பேரும் 2010-ம் ஆண்டு பொது தேர்வின்போது பல்வேறு சலுகைகளைப் பெற்றுள்ளனர்.
இது தவிர 2010-2011-ம் ஆண்டில் மாற்றுத்திறனுடைய குழந்தைகள் கல்வி பெறுவதற்காக ரூ.39.03 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications