ஏர் இந்தியாவின் ஐரோப்பிய விமான சேவை முற்றாக நிறுத்தம்!

ஐஸ்லாந்து எரிமலை சீற்றம் காரணமாக அதிலிருந்து வெளியாகும் சாம்பல் விண்வெளியில் வெகு தொலைவு வரை பரவியுள்ளது. இதனால் விமான சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான விமான நிறுவனங்கள் இப்பகுதி வழியாக செல்லும் விமானங்களை ரத்து செய்துள்ளன. இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா பகுதிக்கு இயக்கும் விமானங்களை முறறாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
இதனால் இந்தியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்க நாடுகளுக்குச் செல்லும் பயணிகள் மும்பை, டெல்லி விமான நிலையங்களில் தங்கியுள்ளனர். பிரிட்டன் தனது வான்வழி பரப்பை முற்றிலுமாக மூடியுள்ளது. இதனால் விமான சேவை மீண்டும் எப்போது தொடங்கும் என்பது தெரியவில்லை.
சனிக்கிழமை வரை எரிமலை சீற்றம் தணிந்தபாடில்லை. மேலும் நிலைமை முந்தைய தினங்களைக் காட்டிலும் மிக மோசமாக உள்ளது. எனவே இப்பகுதிகளில் விமானங்களை இயக்குவது பாதுகாப்பானதல்ல என்று பிரிட்டன் வான்வழி சேவை நிறுவனம் (நாட்ஸ்) அறிவித்துள்ளது.
மாற்றுப் பாதை மூலம் விமானங்களை இயக்குவது குறித்து ஆராய்வதாக பிரிட்டன் அறிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து பிராங்பர்ட், பாரிஸ், லண்டன், சிகாகோ, நியூயார்க், டொரண்டோ ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் விமான சேவைகளை ரத்து செய்வதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
மாற்று தேதியில் எவ்வித அபராதமுமின்றி பயணம் செய்யலாம். அல்லது முழு பயண கட்டணமும் திரும்பி அளிக்கப்படும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
பயணிகள் அவதி
மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 4 தினங்களாக தங்கியுள்ள வெளிநாட்டுப் பயணிகள் பலர் உணவு, தண்ணீர் கிடைக்கவில்லை என வருத்தம் தெரிவித்தனர்.
குறிப்பாக கத்தார் விமானப் பயணிகள் நான்கு தினங்களாக தங்களுக்கு குடிநீர் கூட கிடைக்கவில்லை என அட்டைகளில் எழுதி விமான நிலையத்துக்கு வெளியே நிற்பவர்கள் பார்க்கும்படி கைகளில் பிடித்திருந்தனர்.












Click it and Unblock the Notifications