பிரபாகரன் தாயாரை திருப்பி அனுப்பியது சரிதான் – கூறுகிறார் சுப்பிரமணியன் சுவாமி
மதுரை: சிகிச்சைக்காக சென்னை வந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியது வரவேற்கத்தக்கது என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.
மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்த பார்வதி அம்மாளை சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, மீண்டும் மலேசியாவுக்கு திருப்பி அனுப்பிய விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட பல நாட்டு பிரஜைகள் சென்னை மருத்துவமனைகளுக்கு வந்து சிறப்பு சிகிச்சைகள் பெற்று நல்ல உடல் நலத்துடன் திரும்பிச் செல்வது வழக்கம்.
ஆனால், தமிழ் ஈழத்துக்காக போராடிய பிரபாரகனின் தாயாருக்கு தமிழ்நாட்டுக்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறித்து பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியை இந்தியாவுக்குள் அனுமதிக்க மறுத்த இந்திய அரசின் நடவடிக்கை மிகவும் சரியானது.
யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வந்து, தங்கி செல்ல இந்தியா ஒன்றும் தர்மசாலை அல்ல.
ராஜீவ் காந்தியை கொன்றதற்காக பார்வதி முதலில் கண்டனம் தெரிவிக்கட்டும். அதன் பிறகு அவரை இந்தியாவுக்குள் அனுமதிப்பது பற்றி பிறகு பரிசீலிக்கலாம்' என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.