பெங்களூர் ஸ்டேடிய குண்டுவெடிப்பு – இந்தியன் முஜாஹிதீன் மீது சந்தேகம் வலுக்கிறது
பெங்களூர்: பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் வெடிகுண்டுகளை வைத்தது இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
பெங்களூர் நகரில் மேலும் ஐந்து இடங்களில் குண்டுகள் வைக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கடந்த சனிக்கிழமை 2 இடங்களில் குண்டுகள் வெடித்தது.
கிரிக்கெட் மைதான சுற்றுச்சுவர் மற்றும் மைதானத்தை அடுத்த போலீஸ் வயர்லஸ் தலைமை அலுவலகம் அருகே நடந்த இந்த குண்டு வெடிப்புகளில் சிக்கி போலீஸ்காரர்கள் உள்பட 15 பேர் காயம் அடைந்தனர்.
இதையடுத்த நடந்த சோதனைகளில் 8-வது கேட் பகுதியில் வெடிக்காத குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு செயல் இழக்கச் செய்யப்பட்டது. நேற்று 2-வது நாளாக வெடிகுண்டு நிபுணர்களும், போலீசாரும் சோதனை நடத்தினார்கள். அப்போது 1-வது கேட் மற்றும் மகாத்மா காந்தி சிலை அருகே மேலும் 2 வெடிக்காத குண்டுகள் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மேலும் 5 இடங்களில் குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கலாம் என்று மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
தீவிரவாதிகள் 10 வெடிகுண்டுகளை தயார் செய்து கொண்டு வந்து வைத்திருக்கலாம். அதில் 2 வெடித்துவிட்டது. 3 இடங்களில் இருந்தவை கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. மேலும் 5 குண்டுகள் இருக்க வாய்ப்புள்ளது என்று உளவுத்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தை உஷார்படுத்தி உள்ளது.
சின்னசாமி ஸ்டேடியத்தில் குண்டுகள் வைத்ததை இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. தாவூத் இப்ராகிம் கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக ஒரு டி.வி. சானலுக்கு தொடர்பு கொண்டு மர்ம மனிதன் ஒருவன் பேசியதை போலீசார் நம்பவில்லை. குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அவர்கள் 20 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் இதற்கு முந்தைய நடந்த குண்டு வெடிப்புகளுடன் ஒப்பிட்டு பார்த்தபோது, இது இந்தியன் முஜாகிதீன்களின் கைவரிசையாக இருக்கக்கூடும் என்ற பொதுவான சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தியன் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்தவர்கள்தான் 2005 முதல் 2008ம் ஆண்டு வரைநடந்த குண்டு வெடிப்புகளை நடத்தியது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.
இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் நிறுவனரான யாசின் பத்கல் மீதும் சந்தேகப்பார்வை வலுத்துள்ளது. புனே குண்டுவெடிப்பில் பத்கல் தான் முக்கியக் குற்றவாளியாக கருதப்படுகிறார். வெடிகுண்டுகளைத் தயாரிப்பதில் கில்லாடி இந்த பத்கல். கர்நாடகத்தை சேர்ந்தவர்தான் பத்கல்.
பெங்களூர் ஸ்டேடியத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கும் பத்கல்தான் காரணம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
ஸ்டேடியத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டுகள் அனைத்தும் அம்மோனியம் நைட்ரேட் கலவையுடன் இருந்தன. அதில் சோடியம் கார்போனேட் ஜெல் கலவையும் சேர்க்கப்பட்டிருந்தது. இந்த ஜெல் கலவை வெடிபொருள் சேர்க்கைகளை மறைத்துவிடும்.
2008ம் ஆண்டு ஜூலை மாதம் பெங்களூரில் தொடர் குண்டு வெடிப்பை நடத்த 9 இடங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன. ஆனால் பெங்களூரில் எப்போதும் காணப்படும் அதிக ஈரப்பத காற்று காரணமாகவும், சில தவறுகளாலும் அந்த குண்டுகள் வெடிக்கவில்லை.
தற்போது சின்னசாமி ஸ்டேடியத்தில் கண்டெடுக்கப்பட்ட குண்டுகள் அனைத்தும், 2008-ம் ஆண்டு வைக்கப்பட்ட குண்டுகள் போலவே உள்ளது.
குண்டுகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் உடுப்பியில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. தும்கூர் நகரில் ரகசிய இடத்தில் இந்த குண்டுகள் தயாரிக்கப்பட்டிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்த லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் ஏற்கனவே கராச்சி திட்டம் தீட்டியுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் போலீசாரிடம் சிக்கிய இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதி ஷேக் அப்துல் காஜா போலீசாரிடம் கூறுகையில், கராச்சியில் யாசீன் பத்கல் மற்றும் பலரை நேரில் பார்த்தேன் என்று கூறி இருந்தான்.
எனவே இந்த குண்டு வெடிப்பு கராச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications