காலாவதி மருந்து விவகாரம்: சிபிஎம் மீது கருணாநிதி தாக்கு
சென்னை: காலாவதி மருந்து விவகாரத்தில் நடவடிக்கை எடுத்த என் மீதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பழி போடுவது மிகவும் வருந்தத்தக்கது என்று முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. அதன் விவரம்:
ஜான் ஜோசப் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): தற்போது போலி மருந்துகளும், காலாவதி மருந்துகளும் நடமாடுகின்றன. காலாவதியான மருந்துகளால் ஆபத்து இல்லை என்று முதல்வர் இந்த அவையிலேயே கூறினார். ஆனால் காலாவதியான மருந்தினாலும் உயிருக்கு ஆபத்து வரும்.
முதல்வர் கருணாநிதி (குறுக்கீட்டு): காலாவதி மருந்துகளை விட போலி மருந்துகள் தான் உயிருக்கு ஆபத்து விளை விக்கக்கூடியவை என்று நான் சொன்னதை வேண்டுமென்றே திசை திருப்பி, ஏதோ முதல்வர் தவறாக- காலாவதி மருந்துகளால் யாருக்கும் ஆபத்தில்லை என்று சொன்னதாக ஒரு அரசியல் விவாதத்தை சில நண்பர்கள் இந்த அவையிலே மாத்திரமல்ல, வெளியிலேயும் தங்களுடைய கட்சிப் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
நான் சொன்னது, காலாவதி மருந்து என்பது, பிறகு பிரயோசனமே இல்லாமல், எந்தவிதமான சாகமும் இல்லாமல், எந்தவிதமான நன்மை தீமை எதுவும் இல்லாமல் பயன்படாமல் போய் விடுகிறது.
ஒரு நோயாளிக்கு அந்த மருந்தைக் கொடுத்தால், கொடுக்க வேண்டிய உண்மையான மருந்தைக் கொடுக்காமல், கொடுக்கக்கூடாத மருந்தைக் கொடுத்ததாக ஆகிவிடும் என்றுதான். இந்த அவையிலே விளக்கம் அளித்திருக்கிறேன்.
வேண்டுமானால், நான் அளித்த விளக்கத்தை மீண்டும் படித்துப் பார்த்துக் கொள்ளலாம். நான் எதற்குச் சொல்ல வருகிறேன் என்றால், காலாவதி மருந்துகளை விட போலி மருந்துகள் ஆபத்தானவை என்பதற்காகத்தான் சொல்ல வந்தேன்.
அது மாத்திரமல்ல, இப்படிப்பட்ட மருந்துகள், காலாவதி மருந்துகள் விற்பனையாகின்றன. சிலபேர் அதிலே பிழைக்கிறார்கள். ஏமாற்றி வாழ்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டவுடன், எல்லா அதிகாரிகளையும், தலைமைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர், அமைச்சர் இப்படி எல்லோரையும் அழைத்து, உடனடியாக ஓர் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, இதைப்பற்றி ஆராய்ந்து அன்றைக்கே நான் இட்ட உத்தரவினால்தான் இன்றைக்குப் பல பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை அவசரப்பட்டு வேண்டுமென்றே என் மீது அபவாதம் கூற வேண்டுமென்று எண்ணுகின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
வேறு கட்சிக்காரர்கள் என்றால், நான் அதைப் பொருட்படுத்த மாட்டேன். எதையும் துல்லியமாக ஆராய்ந்து, அதைப்பற்றிச் சொல்லக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே இப்படிப்பட்ட ஒரு மகத்தான தவறை, பழியை என் மீது போடுமேயானால், அதற்காக நான் மிக மிக வருந்துகிறேன் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications