பார்வதி அம்மையார் திருப்பி அனுப்பப்பட ஜெயலலிதா தான் காரணம்-வீரமணி

அவர் விடுத்துள்ள அறிக்கையி்ல்,
பார்வதி அம்மையார் திருப்பி அனுப்பப்பட்டதற்குக் காரணம் 2002ல் அதிமுக முதல்வராக இருந்த ஜெயலலிதா மத்திய அரசுக்கு எழுதிக் கொண்ட கடிதம் தான்.
பிரபாகரனின் தாயார் திருமதி பார்வதி அம்மாள் வேலுப்பிள்ளை அவர்கள் பக்கவாத நோயினால் தாக்குண்டு, பெரிதும் உடல்நலம் பாதிக்கப்பட்டு, இலங்கையிலிருந்து மலேசியாவிற்குச் சென்று, அங்கு சரியான சிகிச்சைக்கு வழி இல்லை என்பதற்காக விசா பெற்று இங்கே (தமிழ்நாட்டிற்கு) மருத்துவ சிகிச்சைக்காக வந்த நிலையில், 16.4.2010 அன்று விமான நிலையத்தில் அவரை இறங்கவிடாமல், திருப்பி அனுப்பியது மனிதநேயத்திற்கு விரோதமான செயல் என்பதைச் சுட்டிக்காட்டி அறிக்கை நாம் விடுத்திருந்தோம்.
அதே போல பல கட்சியினரும் உணர்ச்சிபூர்வமாக அறிக்கை விடுத்தனர், அதிமுகவைத் தவிர!.
இந்நிலை ஏற்பட்டதற்கு மூலகாரணம் 2002ல் பிரபாகரனின் தாய், தந்தையர் இலங்கை சென்றுவிட்ட நிலையில், அவர்கள் மீண்டும் திரும்பி வந்தால், அவர்களை அனுமதிக்கக்கூடாது என்று ஒரு ஆணையை மத்திய அரசுக்கு எழுதிப் பெற்ற பெருமை ஜெயலலிதாவைத்தான் சாரும்.
அவர்கள் முதல்வராக இருந்தபோதுதான் இந்தச் சாதனையைச் செய்தார்!.
நம் அதிகாரிகளுக்கு இப்படி ஒரு இக்கட்டான நிலை இதனால்தான் என்ற உண்மையை தமிழக முதல்வர் கலைஞர் சட்டமன்றத்தில் அம்பலப்படுத்தியுள்ளார்.
எனவே, இதற்குக் காரணமான அதிமுக ஆட்சி பற்றி தமிழ் கூறும் நல்லுலகம் தெரிந்து கொள்வது முக்கியமாகும்.
அதோடு, பிரபாகரனின் தாயார் இங்கே வந்து மீண்டும் சிகிச்சை பெற விரும்பினால், மத்திய அரசுக்கு தமது அரசு கடிதம் எழுதி உதவிடத் தயார் என்றும் குறிப்பிட்டிருப்பது மிகவும் மனிதாபிமானத்துடன் கூடிய நல்ல செயல்.
முதல்வரின் கூற்றை வரவேற்பதோடு, அவர்கள் அதற்கான முயற்சியைச் செய்ய வேண்டும் என்றும் உலகத் தமிழர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இதற்கு முன்புகூட, ஜெயலலிதா ஆட்சியின்போது தோழர்கள் பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன் போன்றவர்களுக்கு வாய்ப்பூட்டு போட்டு, பேசத் தடையை சென்னை உயர்நீதிமன்றத்தில் வாங்கிய நிலை தொடர்வதை ரத்து செய்து, அவர்களது வாய்ப்பூட்டை விலக்கிய செயலும் முதல்வர் கருணாநிதி அரசின் மனிதநேயம் மனித உரிமைக் காப்பினைக் காட்டுவதாகும் என்று கூறியுள்ளார் வீரமணி.












Click it and Unblock the Notifications