புதைந்த கட்டத்தில் மேயர், திமுக கவுன்சிலர்கள் குடியேற இந்து மக்கள் கட்சி கோரிக்கை
கோவை: கோவை அம்மன்குளம் பகுதியில், புதைந்த அடுக்குமாடி கட்டடத்தை சீர் செய்த பின்பு பொது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அதில் கோவை மேயர், கோவை துணை மேயர், கோவை மாநாகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள், கட்டட ஒப்பந்ததாரர், பொறியாளர் ஆகியோர் சோதனைக்காக ஆறு மாதம் வரை குடியேற வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கோவை அம்மன்குளம் பகுதியில், புதைந்த அடுக்குமாடி கட்டடத்தை இ.ம.க. தலைவர் அர்ஜூன் சம்பத், மாநில செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் பார்வையிட்டனர். பின்பு அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது
அடுக்குமாடி கட்டடம் மண்ணில் புதைந்ததற்கு, ஆறரை அடிக்கு கீழே இருந்த மண் இளக்கமாக இருந்ததால் கட்டடம் புதைந்ததாக கூறியுள்ளனரே தவிர, இதற்கு காரணம் கான்ட்ராக்டரா, குடிசைமாற்று வாரியமா, இடம் தேர்வு செய்து கொடுத்த மாநகராட்சியா என்று யாரையும் குறிப்பிடவில்லை.
மாவட்ட நிர்வாகமோ, அரசோ தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்குள் மற்றொரு கட்டடம் புதைந்து வருகிறது.
இனி படிப்படியாக ஒவ்வொரு கட்டடமும் புதைவதற்கு வாய்ப்புள்ளதாக, தனியார் கட்டுமானக் கழகத்தினர் கூறுகின்றனர்.
செம்மொழி மாநாடு குறித்து பேட்டி அளிக்கும் மேயர், கலெக்டர், அமைச்சர் பழனிச்சாமி ஆகியோர், கட்டடம் வலுவாக உள்ளதாகவும், இரண்டு கட்டடம் மட்டுமே சாய்ந்துள்ளதாகவும் கூறுகின்றனர். இதனால் பயப்பட வேண்டாம், மக்களை குடியமர்த்தலாம் என்று சொல்கின்றனர்.
பொது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், பணிகளை நிறைவு செய்த பின்பு, அதில் கோவை மேயர், கோவை துணை மேயர், கோவை மாநாகராட்சி தி.மு.க. கவுன்சிலர்கள், கட்டட ஒப்பந்ததாரர், பொறியாளர் ஆகியோரை சோதனைக்களமாக, ஆறு மாதங்கள் வரை குடியேற வேண்டும். அதன் பின்பு, பொதுமக்கள் குடியிருப்பது பற்றி யோசிக்கலாம் என்றார்கள்.