தான்டேவாடா சிஆர்பிஎப் முகாம்கள் மீது மீண்டும் நக்சலைட்கள் துணிகரத் தாக்குதல்
ராய்ப்பூர்: சட்டிஸ்கர் மாநிலம் தான்டேவாடா மாவட்டத்தில் மீண்டும் சிஆர்பிஎப் முகாம்கள் மீது மாவோயிஸ்ட் நக்சலைட்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை இரவு, தான்டேவாடா மாவட்டத்தில் உள்ள ஐந்து சிஆர்பிஎப் முகாம்களை தாக்கியுள்ளனர் நக்சலைட்கள். இதில், இரு தரப்பினரும் கடுமையான துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில் உயிரிழப்பு எத்தனை என்பது குறித்து தகவல் இல்லை.
மொத்தம் 300 முதல் 400 நக்சலைட்கள் வரை இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கெங்கர் லங்கா, போடம்பள்ளி, பேஜி ஆகிய இடங்களில் ஓய்வில் இருந்த சிஆர்பிஎப் ஜவான்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இரவு 10 மணி வரை தாக்குதல் தொடர்ந்தது. இதுகுறித்து சட்டிஸ்கர் கூடுதல் டிஜிபி ராம் நிவாஸ் கூறுகையில், தொலைவிலிருந்து நக்சலைட்கள் துப்பாக்கிகளால் சுட்டனர். பதிலுக்கு சிஆர்பிஎப் மற்றும் மாநில போலீஸார் சுட்டனர். இருப்பினும் எங்களது பக்கம் உயிரிழப்பு ஏதும் இல்லை என்றார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அனைத்து சிஆர்பிஎப் முகாம்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் 6ம் தேதி இதே தான்டேவாடா மாவட்டத்தில் நடந்த பயங்கரத் தாக்குதலில் 76 சிஆர்பிஎப் ஜவான்களை நக்சலைட்கள் கொன்று குவித்த சம்பவம் நினைவிருக்கலாம். இநத நிலையில் மீண்டும் சிஆர்பிஎப் ஜவான்களை அவர்கள் குறி வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.