லலித் மோடியை குற்றவாளி போல நடத்துவது தவறு – ஷில்பா, பிரீத்தி ஜிந்தா ஆவேசம்
இந்த இரு அணிகளிலும் பினாமி மூலம் பங்கு வைத்துள்ளார் மோடி என்று ஒரு குற்றச்சாட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் வாரியம் தன்னை கைவிட்டு விட்டதைத் தொடர்ந்து ஐபிஎல் உரிமையாளர்களை தூண்டி விட்டு தனக்கு ஆதரவாக திரள வைக்கிறார் மோடி என்று தெரிகிறது. அதிலும் தான் மறைமுகமாக பங்கு வைத்திருப்பதாக கூறப்படும் அணிகளின் உரிமையாளர்கள்தான் மோடியை தீவிரமாக ஆதரித்துப் பேச ஆரம்பித்துள்ளனர்.
முதலில் பெங்களூர் அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா ஆதரித்துப் பேசினார். பின்னர் புதிதாக சேர்ந்துள்ள புனே அணியை வாங்கியுள்ள சுப்ரதோ ராய் ஆதரவு தெரிவித்துப் பேசினார்.
தற்போது ராஜஸ்தான் அணியின் இணை உரிமையாளரான ஷில்பா ஷெட்டியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளரான பிரீத்தி ஜிந்தாவும் மோடியை தீவிரமாக ஆதரித்துப் பேசியுள்ளனர்.
இதுகுறித்து ஷில்பா கூறுகையில், ஐபிஎல்லின் முக்கிய அங்கம் மோடி. அவருக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு. ஐபிஎல்லின் மூளையே மோடிதான். இது அவருடைய குழந்தை. மோடியால்தான் ஐபிஎல் இந்த அளவுக்கு வளர முடிந்தது.
ஐபிஎல்லின் பின்னணியில் நடந்த தவறுகள் குறித்து எனக்குத் தெரியாது. அப்படியே இருந்தாலும் சட்டப்படியான நடவடிக்கைகள் உள்ளன. அதில் தவறு செய்தவர்கள் என்று குற்றம் சாட்டப்படுபவர்கள் நிரூபிக்ப்படும் வரை அவர்களை குற்றம சாட்ட முடியாது. குற்றம் நிரூபிக்கப்படாதவரை ஒருவரை எப்படி குற்றவாளி என்று கூற முடியும்.
உலகளவில் மிகப் பெரிய வெற்றியாக ஐபிஎல்லை மாற்றியவர் மோடி என்பதை மறந்து விடக் கூடாது. அந்த பாராட்டை அவருக்கு நாம் கொடுத்தே ஆக வேண்டும். மோடியின் முயற்சிகளால்தான் இன்று ஐபிஎல் இந்த அளவுக்கு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என்றார் ஷில்பா.
இத்போல பிரீத்தி ஜிந்தா கூறுகையில், பஞ்சாப் அணியில் லலித் மோடி பங்குதாரர் அல்ல. இந்த விஷயத்தில் தவறான செய்திகள் பரவி வருகின்றன. இவை எல்லாமே அடிப்படை ஆதார மற்றவை. இது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது என்றார்.