ஐபிஎல் அணிகளின் பண முதலீடுகளில் ஹவாலா பணம்? – அமலாக்கப் பிரிவு விசாரணை
மும்பை: ஐபிஎல் அணிகளில் ஹவாலா பணம் பெருமளவில் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சந்தேகப்படுகிறார்கள். மேலும் வெளிநாடுகளிலிருந்து பெருமளவிலான பணம் நான்கு ஐபிஎல் அணிகளில் பெரிய அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளதையும் கண்டறிந்துள்ள அவர்கள் இதுதொடர்பாக வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளனர்.
ஐபிஎல விவகாரத்தைத் தோண்ட தோண்ட நாற்றம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. வருமான வரித்துறையினரும், அமலாக்கப் பிரிவினரும் தீவிர விசாரணைகளில் இறங்கியுள்ளனர்.
வருமான வரித்துறையினர் தொடர் சோதனைகளில் மும்முரமாக இறங்கியுள்ள நிலையில் மறுபக்கம் அமலாக்கப் பிரிவினரும் தங்களது பிடியை இறுக்க ஆரம்பித்துள்ளனர்.
ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு சூதாட்ட புக்கி மூலம்தான் பெருமளவிலான பணம் ஐபிஎல்லின் நான்கு அணிகளுக்குப் போவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நான்கு அணிகளின் பண புழக்கம் குறித்த தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது அமலாக்கப் பிரிவு.
இதுதவிர மொரீஷியஸ், கேமன் தீவு ஆகிய இடங்களிலிருந்து பெருமளவிலான வெளிநாட்டுப் பணம் குறிப்பிட்ட நான்கு அணிகளுக்கு வந்து சேருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பணம் எப்படிப் பெறப்பட்டு வருகிறது என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. மேலும் வெளிநாட்டுப் பணத்தைப் பெறுவது தொடர்பான அன்னியச் செலாவணி சட்டப் பிரிவுகளை மீறும் வகையில் நடவடிக்கைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து வரி ஏய்ப்பு வழக்கு ஒன்றை அமலாக்கப் பிரிவு பதிவு செய்துள்ளதாம். இந்த நான்கு அணிகளில் ஷில்பா ஷெட்டியை இணை உரிமையாளராகக் கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அணியில் மோடி ஒரு பினாமி உரிமையாளர் என்று கூறப்படுகிறது. இதனால்தான் ஷில்பா ஷெட்டி, மோடியை படு தீவிரமாக ஆதரிப்பதாகவும் கருதப்படுகிறது.
மொரீஷியஸ் மற்றும் கேமன் தீவிலிருந்து பணம் குவிவதாக வந்த தகவலைத் தொடர்ந்து மொரீஷியஸுக்கு ஒரு அதிகாரிகள் குழுவை அமலாக்கப் பிரிவு அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
கேமன் தீவு கியூபாவுக்கு தெற்கே, ஜமைக்காவுக்கு அருகே உள்ள குட்டித் தீவாகும். மிகச் சிறிய தீவாக இருந்தாலும் கூட இங்கு வங்கித் துறையும், நிதி மாற்றப் பிசினஸும் மிகப் பெரிய அளவில் நடைபெறுகின்றன. கரீபியத் தீவுகளிலேயே மிகப் பணக்கார தீவு இது என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டுப் பணம் உள்ளே பாய்வதாக வெளியாகியுள்ள தகவல்களைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நான்கு அணிகளையும் தனது தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளது அமலாக்கப் பிரிவு.