தேர்தல் முடிவு வெளியாகும் நிலையில் திருவாரூர் பேரூராட்சி அதிமுக வேட்பாளர்கள் மாயம்!
திருவாரூர்: திருவாரூர் கொரடாச்சேரி பேரூராட்சிக்கு நடந்த கவுன்சிலர் பதவி தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்கள் இருவரைக் காணவில்லை. அவர்களை திமுகவினர் கடத்திச் சென்றுவிட்டதாக அதிமுக குற்றம் சாட்டியுபள்ளது.
கொரடாச்சேரியில் முன்னாள் திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைச்செல்வம் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, கொரடாச்சேரி பேரூராட்சி துணைத் தலைவர் மற்றும் அனைத்துக் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் தங்களை பதவியை ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து கடந்த 19ம் தேதி பேரூராட்சி பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிட்டன.
இன்று இந்தத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந் நிலையில் அதிமுக 2வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட காளிதாஸ் திடீரென இன்று திமுகவில் இணைந்துவிட்டார்.
அதே நேரத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மல்லிகா, கோவிந்தராஜ் ஆகியோரை காணவில்லை என்று அந்தக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இவர்களை திமுகவினர் கடத்திச் சென்றுவிட்டதாக குற்றம் சாட்டி அதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில் திடீரென இரு அதிமுக வேட்பாளர் மாயமானது திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications