மோட்டார் சைக்கிளில் சென்று பெண்களிடம் செயின் பறித்த கணவன்-மனைவி கைது
சென்னை: சென்னையில் தனியே நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறித்து வந்த கணவன்- மனைவி கைது செய்யப்பட்டு 9 செயின்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை கோட்டூர்புரம் பகுதியில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வந்தன. சில சம்பவங்களில் பெண்ணும் செயினைப் பறித்ததாக புகார்கள் வந்தன.
இதையடுத்து குற்றவாளிகளைப் பிடிக்க இன்ஸ்பெக்டர் செல்லப்பா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தப் படையினர் கடந்த சில வாரங்களாக கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
இந் நிலையில் காந்தி மண்டபம் அருகே அடிக்கடி சந்தேகத்துக்கிடமாக திரிந்த வந்த ஒரு ஆணையும் பெண்ணையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசவே சந்தேகம் அதிகமானது.
காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று விசாரித்தபோது, செயின் பறிப்பில் ஈடுபட்டதை இருவரும் ஒப்புக் கொண்டனர்.
அவர்களது பெயர் கனகராஜ் (28), ராஜேஸ்வரி (23). கணவன்- மனைவியான இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
கனகராஜ் ஹெல்மெட் அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்ல, பின்னால் அமர்ந்திருக்கும் வார். ராஜேஸ்வரி, தனியே நடந்து செல்லும் பெண்களிடம் முகவரி கேட்பதுபோல் நடித்து திடீரென செயினை பறித்துக் கொண்ட தப்பியுள்ளனர்.
இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 44 பவுன் எடையுள்ள 9 செயின்களை பறிமுதல் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications