ஏரிகள் நீர்மட்டம் குறைகிறது-சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வரும் அபாயம்
சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருவதால் நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளவு 35 அடியாகும். தற்போது 28.87 அடி தான் நீர் உள்ளது. அதாவது 1,491 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.
இதிலிருந்து 315 கனஅடி குடி தண்ணீர் சென்னை நகர குடிநீர் தேவைக்க திறந்து விடப்பட்டு வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளவு 24 அடி. அதில் தற்போது 19.25 அடி நீர் உள்ளது. அதாவது 2,422 மில்லியன் கன அடி நீர் உள்ளது. ஏரிக்கு 266 கன அடி நீர் வரத்து உள்ள நிலையில் ஏரியிலிருந்து 129 கன அடி நீர் குடிநீ்ர் தேவைக்காக றந்துவிடப்படுகிறது.
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளவு 17.86 அடி. அதி்ல் 1.63 அடி தான் தண்ணீர் உள்ளது..
புழல் ஏரியின் உயரம் 17.78 அடி. அதில் தற்போது 17.70 அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 29 கன அடியாக உள்ளது. 125 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்திற்கு வழங்கப்படும் கிருஷ்ணா நீர், அங்கு நிலவும் கடும் வறட்சி காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் நிறுத்தப்பட்டது.
மீண்டும் ஜூலை மாதத்தில் தான் நீர் வழங்கப்படும என்று தெரிகிறது. இதனால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது.
ஆனால், ஏரிகளில் அக்டோபர் மாதம் வரைக்குமான போதுமான தண்ணீர் இருப்பதாகவும், இதனால் குடிநீர் தட்டுப்பாடு வராது என்றும் குடிநீர் வாரியத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
பல்லாவரம் பகுதிக்கு மெட்ரோ வாட்டர்:
இந் நிலையில் பல்லாவரம் நகராட்சி பகுதிகளில் பாலாற்று கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கோடை காலத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இந் நிலையில் ஆலந்தூர் தொகுதி எம்.எல்.ஏவும், தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான தா.மோ. அன்பரசன் இந்த ஆண்டு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க சென்னை குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சென்னை நகருக்கு வழங்கப்படும் மெட்ரோ குடிநீரை பல்லாவரம் நகரசபை பகுதிக்கும் வழங்கக் கோரினார்.
இதையடுத்து பல்லாவரம் கண்ணபிரான் கோவில் தெருவில் உள்ள நகரசபை குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு 10 லட்சம் லிட்டர் மெட்ரோ நீர் குழாய் இணைப்பு மூலம் கொண்டு வரப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.