பார்வதி அம்மையாரை வைத்து ஈழ ஆதரவு பிரசாரம் செய்ய திட்டமிட்டோமா?-வைகோ மறுப்பு

Subscribe to Oneindia Tamil

Vaiko
சென்னை: பார்வதி அம்மையாரை வைத்து தமிழ் ஈழ ஆதரவு பிரசாரம் செய்யும் எண்ணம் துளி அளவும் எங்களுக்கு இல்லை. இதை நான் இந்த தமிழ் மண்ணில் ஆணையிட்டு சொல்கிறேன் என்று ம‌திமுக பொது‌‌ச் செயல‌ாளர் வைகோ கூறினார்.

மரு‌த்துவ ‌சி‌‌கி‌ச்சை பெற செ‌ன்னை வ‌ந்த பா‌ர்வ‌தி அ‌ம்மாளை குடியே‌ற்ற‌த்துறை அ‌திகா‌ரிக‌ள் ‌‌திரு‌ப்‌பி அனு‌ப்‌பியதைக் க‌ண்டி‌த்து செ‌ன்னை எ‌ழு‌ம்பூ‌ரி‌ல் ம‌திமுக. சா‌‌ர்‌பி‌ல் இன்று உ‌ண்ணா‌விர‌த‌ப் போரா‌ட்ட‌ம் நடந்தது.

வைகோ, த‌‌மி‌ழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாற‌ன் ஆகியோர் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில் ஏராளமான ம‌திமுகவினர் தவிர, த‌மி‌ழ் தே‌சிய க‌ட்‌சி, இ‌ந்து மு‌ன்ன‌ணி உ‌ள்‌ளி‌ட்ட க‌ட்‌சிகளை சே‌ர்‌ந்தவர்களும் ப‌ங்கே‌ற்றன‌ர்.

போராட்டத்தில் வைகோ பேசுகையி்ல, தள்ளாத வயதில் உடல் நலம் குன்றி சிகிச்சை பெறு வதற்காக பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் சென்னைக்கு வந்தார். ஆனால் அவரை தமிழ் மண்ணில் இறங்க விடாமல் திருப்பி அனுப்பியதற்கு முதல்வர் கருணாநிதி முன்னுக்குப் பின் முரணாக பேசி வருகிறார்.

இப்போது நாங்கள் கேட்கும் கேள்வி. நள்ளிரவுக்கு பிறகுதான் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டது தெரியும் என்றால் 10 மணிக்கே விமான நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டதன் மர்மம் என்ன? ஐ.ஜி., டி.ஐ.ஜி., துணை கமிஷனர் உள்பட உயர் அதிகாரிகள் முன்கூட்டியே வந்ததன் மர்மம் என்ன?.

உங்களுக்கு தெரியாமல் போலீஸ் குவிக்கப்பட்டதா? நானும், பழ.நெடுமாறனும், விமான நிலையத்திற்கு சென்றோம். பரபரப்பாக கூட்டத்தை கூட்டிச் செல்வது நல்லதல்ல என்பதால் சக்கர நாற்காலியை அனுப்பி நம்பிக்கைக்குரிய 2 பேரை மட்டும் அனுப்பி வைத்தோம். பார்வதி அம்மையாருக்கு உலகப்புகழ் வாய்ந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கு திட்டமிட்டிருந்தோம்.

வயது முதிர்ந்த மூதாட்டியை வைத்து விடுதலைப் புலிகள் ஆதரவு தளத்தை உருவாக்க நாங்கள் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு கூறுவார் என்பதால்தான் விமான நிலையத்திற்கு நாங்கள் எல்லோரையும் அழைத்து செல்லவில்லை. நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்ததால்தான் அவரை திருப்பி அனுப்பும் சூழ்நிலை ஏற்பட்டதாக கூறுகிறார்.

யாரையும் அழைத்து செல்லாத நாங்கள் எப்படி ஆர்ப்பாட்டம் செய்ய முடியும். இதில் இருந்தே மத்திய அரசு அனுப்பவில்லை. தமிழக அரசுதான் அவரை திருப்பி அனுப்பி இருக்கிறது என்பது தெரிகிறது.

பன்னாட்டு விமான நிலையத்துக்கு பயணிகளை வழியனுப்ப வருபவர்கள் செல்லும் சாலையில் அனுமதி சீட்டுடன் சென்று கொண்டிருந்த என்னையும், பழ. நெடுமாறனையும் போலீசார் வழி மறிக்க காரணம் என்ன?.

போலீசார் என் தோள்பட்டையை பிடித்து கையை முறுக்கினர். அந்த அக்கிரமத்தை நானும் நெடுமாறனும் தட்டிக்கேட்டோம். எங்களிடம் விசிட்டர் பாஸ் இருக்கிறது. ஏன் அனுமதிக்க மறுக்கிறீர்கள்? என்று கேட்டோம். ஆனாலும் எங்களை விமான நிலையத்திற்குள் அனுமதிக்காமல் போலீசார் தடுத்து நிறுத்தி விட்டனர்.

பார்வதி அம்மையார் இந்தியாவுக்குள் வருவதற்கு தடை இருந்தால் மத்திய அரசின் கறுப்பு பட்டியலில் அவரது பெயர் இடம் பெற்றிருக்க வேண்டுமே. மத்திய அரசு பரிசீலித்து தானே விசா வழங்கி இருக்கிறது. ஈவு, இரக்கம், மனிதநேயம் இருந்திருந்தால் பார்வதி அம்மையாரை விமானத்தை விட்டு இறக்கி சிறிது நேரம் விமான நிலையத்தில் தங்க வைத்திருக்கலாமே?.

அவர் இப்போது எந்த நிலையில் இருக்கிறார். 81 வயதாகி விட்டது. 4 மணி நேரம் விமானத்தில் பயணம் செய்துள்ளார். அவர் நேசித்த கணவர் இல்லை. பிள்ளைகள் இல்லை. குடியிருந்த வீட்டையும் இடிக்கிறார்கள். இதையெல்லாம் நினைத்து விம்மி கொண்டிருக்கிறார். அவரை திருப்பித்தான் அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசு முடிவெடுத்தால் கூட உங்களால் மாற்ற முடியுமே.

மத்திய உள்துறை அமைச்சரிடம் ஒரு வார்த்தை பேசியிருந்தால், திருப்பி அனுப்பப்பட்டிருக்க மாட்டார். பார்வதி அம்மையாரை வைத்து தமிழ் ஈழ ஆதரவு பிரசாரம் செய்யும் எண்ணம் துளி அளவும் எங்களுக்கு இல்லை. இதை தமிழ் மண்ணில் ஆணையிட்டு சொல்கிறேன்.

இப்போது முதல்வர் சொல்கிறார். அந்த அம்மையார் விருப்பப்பட்டால் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறேன் என்கிறார். ஏழு வல்லரசுகளை எதிர்த்து நின்ற பிரபாகரனை ஈன்ற அந்த தாய் மடிப்பிச்சை கேட்க வேண்டுமா?.

தமிழக வரலாற்றில் இதற்கு மன்னிப்பே கிடையாது. நடந்த சம்பவத்திற்கு இந்திய அரசு வருத்தம் தெரிவிக்க வேண்டும். மலேசியாவில் அவர் இருக்கும் முகவரி அதிகாரிகளுக்கு தெரியும். அங்கு நேரில் சென்று நீங்கள் “எப்போதும் இந்தியாவுக்கு வரலாம்" என்று தெரிவிக்க வேண்டும். அதுதான் செய்த தவறுக்கு பிராயசித்தம் ஆகும்.

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இந்திய அரசுதான் காரணம். ராஜபக்சே திருப்பதி கோவிலில் ராஜ மரியாதையுடன் நடத்தப்பட்டார். அவரது குழந்தைகள் பெங்களூரில் கிரிக்கெட் பார்க்க வேண்டுமா? மீண்டும் மீண்டும் விபரீதத்தை விதைத்து வருகிறீர்கள். தமிழீழ விடுதலைப் போர் அழிந்து விடாது.

எங்களைவிட லட்சக்கணக்கான வீர இளைஞர்கள் வருவார்கள். முத்துக்குமார் உள்ளிட்ட தியாகிகள் செய்த தியாகம் வீண் போகாது என்றார் வைகோ.

விசாரணை நடத்த நெடுமாறன் கோரிக்கை:

நெடுமாறன் பேசுகையில், இந்த சம்பவம் தமிழக மக்கள் மனதில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்ட மன்றத்தில் காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் பேசும்போது, பார்வதி அம்மையாரை அழைத்து உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை சீர்குலைக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

காங்கிரஸ் மீது இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் அவர் சீர்குலைத்து விட்டார். நடந்த சம்பவத்துக்கு மத்திய அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

பா‌ர்வ‌தி அ‌ம்மா‌ள் ‌திரு‌ப்‌பி அனு‌ப்ப‌ப்ப‌ட்ட அ‌ன்று செ‌ன்னை ‌விமான ‌நிலைய‌த்‌‌தி‌ல் நடைபெ‌ற்ற ‌நிக‌ழ்வுகள் தொட‌ர்பாக ‌விசாரணை நடத்தப்பட வே‌ண்டு‌ம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+