சேது சமுத்திர திட்டம்-விசாரணை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பு!!
டெல்லி: சேது சமுத்திரத் திட்டம் குறித்த வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் அடுத்த ஆண்டுக்கு ஒத்திப்போட்டுவிட்டது.
சேது கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டு வரும் பகுதியான, ஆறாவது வழித் தடத்தில் ராமர் பாலம் உள்ளதால், மாற்றுப் பாதையில் அந்த திட்டத்தை செயல்படுத்தக் கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி மற்றும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்து அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.
இதையடுத்து இந்தத் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய டாக்டர் ஆர்.கே. பச்செளரி தலைமையில் நிபுணர் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.
இந் நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான சுப்பிரமணிய சாமி, சேது கால்வாய் திட்டத்தை அறிவிக்கும் முன்பாக, போதிய ஆய்வுகள் நடத்தப்படவில்லை. பச்செளரி குழு அறிக்கை அளிக்கும் வரை சேது சமுத்திர திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.
மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரீன் ரவால் ஆஜரானார். அவர் கூறுகையில்,
இது தொடர்பாக ஆராய டாக்டர் ஆர்.கே. பச்செளரி தலைமையிலான குழு கடந்த ஆண்டு நவம்பர் 10ம் தேதி கூடி ஆலோசித்தது. அத்துடன் தேசிய கடல்சார் மைத்தின் தொழில்நுட்பக் குழு அளித்த கருத்துகளையும் ஆய்வு செய்து வருகிறது.
இதுகுறித்து முழுமையாக ஆராய்ந்து கருத்துக்களை அளிக்க 18 மாத அவகாசம் தேவை என்று கடல்சார் மையம் கூறியுள்ளது. தேசிய கடல்சார் மையத்தின் ஆலோசனை இல்லாமல் இதைச் செயல்படுத்துவது சாத்தியமில்லை என்று நிபுணர் குழுவும் தெரிவித்துள்ளது. எனவே இதற்கு கால அவகாசம் தேவை என்றார்.
இதையடுத்து 2011ம்ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் பச்செளரி குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்ய பிறகு இந்த வழக்கை தொடரலாம் என்று கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.
ராமர் பால பகுதி-தேசிய சின்னமாக அறிவிக்க முடியாது:
அதே நேரத்தில் ராமர் பாலம் அமைந்துள்ள பகுதியை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்குமாறு ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
ராமர் பாலம் அமைந்த பகுதியை தேசிய சின்னமாக அறிவிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள் பச்செளரி குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அதன் மீது தீர்ப்பு அளிக்கும் வரை சேது கால்வாய் திட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என்றும் அறிவித்தனர்.
இதற்கிடையே, வரும் மே மாதத்துடன் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் ஓய்வு பெறுகிறார். அதற்கு பிறகு, இந்த வழக்கை விசாரிக்கும் பெஞ்ச், முதலில் இருந்து விசாரணையை தொடங்காமல், தற்போது விட்ட இடத்தில் இருந்து தொடங்கும் என்றும் கே.ஜி.பாலகிருஷ்ணன் அறிவித்தார்.