அரவாணிகள் ஆவலோடு எதிர்பார்க்கும் மிஸ் கூவாகம் – 27ம தேதி நடக்கிறது

ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூவாகம் கிராமத்தில் இருக்கும் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரைத் திருவிழா விமரிசையாக நடைபெறும். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து இதில் அரவாணிகள் திரளாக கலந்து கொள்வார்கள்.
இந்த விழாவுக்கு வரும் அரவாணிகளை மையமாக வைத்து அவர்களுக்காகவே விழுப்புரத்தில் ஆண்டு தோறும் மிஸ் கூவாகம் அழகிப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான போட்டி வருகிற 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் ஏ.ஆர்.எம். தொண்டு நிறுவனம் சார்பில், கூவாகம் விழாவையொட்டி அரவாணிகள் பங்கேற்கும் நிகழ்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. தொண்டு நிறுவன நிறுவனர் பக்தவத்சலம், அரவாணிகள் நல வாரிய உறுப்பினர் ஷலீமா நிகழ்ச்சிகள் குறித்து பேசினர்.
நிகழ்ச்சி ஏற்பாடு குறித்து பக்தவத்சலம் கூறும்போது, 'கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் பங்கேற்கும் அரவாணிகளிடம் எய்ட்ஸ் தடுப்பு, பாதுகாப்பான உடலுறவு உள்ளிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
அரவாணிகளை ஒருங்கிணைப்பது, பால்வினை நோய்கள் பற்றி விளக்கமளிப்பது, அரவாணிகளிடம் உள்ள திறமையை கண்டறிந்து ஊக்கப்படுத்துவது, விழிப்புணர்வு கண்காட்சி, அரவாணிகள் நலவாழ்வு பெற ஆலோசனை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
வரும் 27ம் தேதி காலை 9.30க்கு இன்னிசைக் கச்சேரியும், நடன நிகழ்ச்சிகளும் நடக்கிறது. பகல் 11.30க்கு மிஸ் கூவாகம் போட்டி நடக்கிறது. அன்று இரவு 7 மணிக்கு, கூவாகத்தில் சுகாதார நல மையத்தில் முழு உடல் பரிசோதனை நடக்கிறது. கோவில் எதிரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பாடல்கள், விளக்க உரை நிகழ்ச்சி நடக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications