தமிழகத்துக்கு கர்நாடக நிறுவனம் 150 மெகாவாட் மின்சாரம்
பெங்களூர்: கர்நாடகத்தைச் சேர்ந்த ஜெஎஸ்டபிள்யூ நிறுவனம் வரும் மே மாதம் 31 வரை தமிழ்நாட்டுக்கு 150 மெகாவாட் மின்சாரம் வழங்கவுள்ளது.
தமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குறையை சமாளிக்க கர்நாடகத்தில் உள்ள ஜெ.எஸ்.டபிள்யூ. மின் உற்பத்தி நிறுவனத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு ஒப்பந்தம் செய்தது. இதன்படி அந்த நிறுவனம் தமிழ்நாட்டுக்கு மே மாதம் 31ம் தேதி வரை 300 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும்.
ஆனால், இந்த ஒப்பந்தத்தை மீறி, ஏப்ரல் 3ம் தேதி தமிழ்நாட்டுக்கு மின்சாரம் வழங்க கர்நாடக அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழ்நாடு மின்சார வாரியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதையடுத்து ஏப்ரல் 7ம் தேதி கர்நாடக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து பெங்களூர் உயர் நீதின்றத்தில் கர்நாடக அரசு மனுத் தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பது குறித்து தென் மண்டல மின் வினியோக மையம் உச்ச நீதிமன்றத்தை அணுகியது.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் விசாரித்தது.
தமிழ்நாடு மின்சார வாரியம் கர்நாடக நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்த நகலும் தாக்கல் செய்யப்பட்டது. இதை பரிசீலனை செய்த நீதிபதிகள் பெஞ்ச் தமிழ்நாட்டுக்கு வழங்குவதாக ஒப்புக்கொண்ட 300 மெகா வாட் மின்சாரத்தில், 150 மெகாவாட் மின்சாரத்தை உடனடியாக கர்நாடக மின் நிறுவனம் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும். கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து, கர்நாடக அரசு ஜெ.எஸ்.டபிள்யூ. மின் நிறுவனம் தமிழ்நாட்டுக்கு 150 மெகாவாட் மின்சாரத்தை மே மாதம் 31ம் தேதி வரை வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.
கர்நாடகம், தமிழ்நாடு சார்பில் உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்த வழக்குகளை வாபஸ் பெறவும் ஒப்புக் கொண்டுள்ளன.












Click it and Unblock the Notifications