கண்ட்ரோலர்கள் ஸ்டிரைக்-மே 1ம் தேதி ரயில்கள் ஓடுமா?
அகில இந்திய ரயில் கண்ட்ரோலர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் (தெற்கு ரெயில்வே) ரமேஷ் சென்னையில் நிருபர்களிடம் பேசுகையி்ல்,
நாடு முழுவதும் தினமும் 9,500 பயணிகள், எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரயில்களும், 6500 சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் 30 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர்.
ரயில்களை இயக்குவதிலும், பயணிகள் பாதுகாப்பு பணியிலும் ரயில் கண்ட்ரோலர்களாகிய நாங்கள் முக்கியப் பங்கு வகிக்கிறோம். ரயில் நிலைய மாஸ்டர்களுக்கு நாங்கள் தரும் தகவல்களை வைத்துத் தான் ரயில்கள் குறிப்பிட்ட பாதையில், குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்படுகின்றன.
தினமும் 35,000 ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கும், 55,000 ரயில் என்ஜின் டிரைவர்களுக்கும், 50,000 உதவி டிரைவர்களுக்கும், 40,000 கார்டுகளுக்கும் ரயில்களை இயக்குவதற்கு வழிகாட்டுகிறோம்.
ரயில்வே கால அட்டவணையை தயாரிப்பதும் கண்ட்ரோலர்கள் தான். வருடம் 365 நாட்களும் இரவும், பகலுமாக ஓய்வின்றி உழைக்கும் எங்களுக்கு உரிய ஊதியம் தரப்படுவதில்லை. கேட்ட பல்வேறு சலுகைகளும் வழங்கப்படவில்லை.
ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாட்டை களைதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், மனஅழுத்தப் படி, விபத்து சீரமைப்பு பணிக்கான படி, ஒலிபெருக்கிப் படி, வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்குதல், ரயில் கட்டுப்பாட்டுப் பணிக்காக தனித்துறை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சர்வதேச உழைப்பாளர் தினமான வரும் மே 1ம் தேதி மட்டும் அகில இந்திய ரயில் கண்ட்ரோலர்கள் சங்கத்தில் உள்ள அனைவரும் ஒட்டுமொத்த விடுமுறை எடுத்து போராட்டம் நடத்த உள்ளோம்.
இதுதொடர்பாக டெல்லியில் உள்ள தலைமை தொழிலாளர் ஆணையாளரிடம் தெரிவித்து விட்டோம். அவர் எங்களை 26ம் தேதி சமரச பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். அன்றைய தினம் எங்களது நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் போராட்டத்தை வாபஸ் பெறுவோம்.
இல்லாவிட்டால் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும். இதனால் அன்று நாடு முழுவதும் ரயில்கள் ஓடாது. ரயில்வே துறைக்கு சுமார் ரூ.1,200 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாவார்கள். இந்த நிலையை தடுக்க ரயில்வே நிர்வாகம் தான் நடவடிக்கை எடு்க்க வேண்டும் என்றார்.