அதிமுக பந்த்: 'கடைகள் திறந்திருக்கும்'-வணிகர் சங்கம்!
சென்னை: வரும் 27ம் தேதி அதிமுக தலைமையிலான எதிர்க் கட்சிகள் நடத்தவுள்ள 'பாரத் பந்த்' வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதில்லை என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை முடிவு செய்துள்ளது.
இதனால் அந்த தினத்தில் மாநிலம் முழுவதும் கடைகள் திறந்திருக்கும் என்பதால் பந்த் பிசுபிசுக்கும் என்று தெரிகிறது.
இது குறித்து பேரவையின் தலைவர் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வணிகர் தின விழாவை முன்னிட்டு வரும் மே மாதம் 5ம் தேதி திருச்சியில் 27வது மாநில மாநாடு நடைபெறும். இந்த மாநாடு 'சுய தொழில்கள் காப்போம் சுதந்திரம் காப்போம்' என்ற முழக்கத்துடன் நடத்தப்படுகிறது.
மக்கள் நலன், தேசநலன் காக்கும் புனித நோக்கத்துடன் நடத்தப்படும் இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான வணிகர்கள் பங்கேற்பர். இந்த மாநாட்டில் முக்கியமான முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
மாநாடு நடைபெறும் 5ம் தேதி வணிகர்கள் தங்கள் கடைகளுக்கு விடுமுறை விடுத்து மாநாட்டிற்கு வருகை தர உள்ளனர்.
இந் நிலையில் 27ம் தேதி அன்று எதிர்கட்சிகள் நடத்தும் பொது வேலை நிறுத்தத்தில் தமிழக வணிகர்கள் பங்கேற்பது சாத்தியமில்லை. ஒரு மாதத்தில் இரு நாட்கள் கடையடைப்பு என்றால் அது வணிகர்களுக்கும், பொது மக்களுக்கும் பெரும் சிரமம் அளிப்பதாக அமைந்து விடும்.
எனவே, அரசியல் கட்சிகள் பொது வேலை நிறுத்தத்தின்போது கடைகளை அடைக்க வேண்டும் என்று வணிகர்களை கட்டாயப்படுத்த வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
அதே நேரத்தில், மக்கள் நலனை முன்னிறுத்தி பொது வேலை நிறுத்தம் அறிவித்து போராடும் அரசியல் கட்சிகளுக்கு எமது பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆன்லைன் வர்த்தக சூதாட்டம், விவசாயத்தில் மரபணு மாற்றம், தவறான ஏற்றுமதி இறக்குமதி கொள்கைகள், வங்கிகள், காப்பீட்டு கழகங்கள், சில்லறை வணிகத்தில் தனியார் மற்றும் அன்னிய மயம் ஆகியவை கைவிடப்பட்டு வணிகம், விவசாயம், மீன்பீடித் தொழில், நெசவு உள்ளிட்ட அனைத்து சுய தொழில்களையும் காக்க மக்கள் அனைவரும் களம் இறங்க வேண்டிய கட்டாயம் நெருங்கி விட்டது என்பதை இப்போதைக்கு தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் பந்த் நாள் அன்று கடைகள் திறந்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. மேலும் போலீஸ் பாதுகாப்புடன் பஸ், ரயில்களும் இயக்கப்படவுள்ளதால் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ள பந்த் பிசுபிசுக்கும் என்றே தெரிகிறது.