இறுதிப் போட்டி முடிந்த அடுத்த விநாடி லலித் மோடி சஸ்பெண்ட்
மும்பை: 3வது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் கடைசிப் பந்து போடப்பட்ட அடுத்த விநாடியே ஐபிஎல் தலைவர் லலித் மோடி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். போட்டி முடிந்ததும் அவரது சஸ்பெண்ட் உத்தரவு இ மெயில் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது. எழுத்துமூலமான உத்தரவை ஸ்டேடியத்தில் வைத்து மோடியிடம், ராஜீவ் சுக்லா வழங்கினார்.
இன்று ஐபிஎல் ஆட்சி மன்றக் குழுக் கூட்டம நடைபெறுகிறது. அதற்குள் மோடி விலக வேண்டும் என கிரிக்கெட் வாரியத் தலைவர் சஷாங் மனோகர் வலியுறுத்தி வந்தார். ஆனால் அதை மோடி ஏற்கவில்லை.
மாறாக நேற்று திடீரென தனது தலைமையில் கூட்டம் நடைபெறும் என அவர் அறிவித்தார்.
இந்த நிலையில் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் அவசரமாக கூடி ஆலோசனை நடத்தினர். அப்போது மனோகருக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி மோடியை சஸ்பெண்ட் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
இதையடுத்து இரவு 8 மணியளவில் மனோகர், அருண் ஜெட்லி, ரத்னாகர் ஷெட்டி, ராஜீவ் சுக்லா ஆகியோர் கூடி கடித்த்தைத் தயார் செய்தனர்.
போட்டி முடிந்த அடுத்த விநாடி இமெயிலைத் தட்டி விட்டார் மனோகர். எழுத்துமூலமான உத்தரவை ஸ்டேடியத்தில் இருந்த மோடியிடம் கொடுத்தார் சுக்லா.
கிரிக்கெட் வாரிய விதி 32ன் கீழ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் மோடி. விளக்கம் கேட்டும் அவருக்கு நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. மேலும் மோடி மீது 22 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இன்றைய ஆட்சி மன்றக் கூட்டத்தில் மோடி பங்கேற்க முடியாது.
இன்றைய கூட்டத்தில் தற்காலிக ஐபிஎல் தலைவர்-ஆணையர் தேர்வு செய்யப்படுகிறார். எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் தீர்மானிக்கப்படவுள்ளது.
ரவி சாஸ்திரி தற்காலிக ஐபிஎல் தலைவராக தேர்வு செய்யப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications