எம்பிசி பட்டியலில் சேர்க்காவிட்டால் சட்டசபைத் தேர்தலைப் புறக்கணிப்போம்-யாதவர்கள்
நெல்லை: யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நெல்லையில் நடந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. இல்லாவிட்டால் சட்டசபைத் தேர்தலைப் புறக்கணிப்போம் எனவும் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.
நெல்லை பொருட்காட்சி திடலில் நேற்று யாதவர் மகாசபை மாநில மாநாடும், வீரன் அழகுமுத்துகோன் சிலை திறப்பு விழாவும் நடந்தது. மாநாட்டிற்காக கோட்டை வடிவில் பிரமண்ட நுழைவுவாயிலும், பந்தலும் அமைக்கப்பட்டிருந்தது. காலையில் மாநாட்டு பந்தல் திறக்கப்பட்டது. தென்மண்டல யாதவர் மகாசபை தலைவர் மரியசுந்தரம் தலைமை வகித்தார். மாநில இளைஞரணி செயலாளர் நம்பி துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் ஊத்துமலை சரவணன், மாநகர செயலாளர் முத்து யாதவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிகளை மாவட்ட தலைவர் கோமதி நாயகம் தொகுத்து வழங்கினார்.
மாலையில் வீரன் அழகுமுத்துகோன் சிலையை திறந்து வைத்து யாதவ மகாசபை தலைவர் தேவநாதன் பேசியதாவது,
எங்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். நெல்லை மாவட்டத்தில் சில பகுதிகளில் யாதவர்கள் மீது பொய் வழக்கு போடுவதை நிறுத்த வேண்டும். 10ம் வகுப்பு, பிளஸ்டூ தேர்வுகளில் முதலிடம் பெரும் மாணவ, மாணவியருக்கு 1 லட்ச ரூபாய் பரிசளிக்கப்படும். யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்காவிட்டால் வருகின்ற சட்டசபை தேர்தலில் வாக்களிக்க மாட்டோம். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் பாமக தலைவர் ஜிகே மணி, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, நாடார் பேரவை தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications