For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லலித் மோடி மீது முக்கிய 5 குற்றச்சாட்டுகள்!

Google Oneindia Tamil News

மும்பை: ஐ.பி.எல். விவகாரத்தில் நடைபெற்றுள்ள மோசடிகள் குறித்து லலித் மோடிக்கு எதிராக 5 பரபரப்பான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.

அதுகுறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து நிருபர்களிடம் பேசிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சஷாங் மனோகர் கூறியதாவது:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமை நிறுவனமான ஜெய்ப்பூர் நிறுவனத்தில் ஷில்பா ஷெட்டிக்கு பங்குகள் விற்கப்பட்டு அது பின்னர் சில தனி நபர்கள் மற்றும் சில நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

டெரெஸ்கோ மற்றும் புளூ வாட்டர் என்று அழைக்கப்படும் நிறுவனங்களுக்கும் பங்குகள் மாற்றப்பட்டுள்ளன. அந்த நிறுவனங்கள் எங்கு இருக்கின்றன என்று யாருக்குமே தெரியவில்லை. பங்குதாரர் பெயர் பட்டியலில் ஷில்பா ஷெட்டியின் பெயரே இல்லை.

பஞ்சாப் அணியை ஏலம் எடுத்த நிறுவனம் சார்பில் பிரீத்தி ஜிந்தா கையெழுத்திட்டிருக்கிறார். ஆனால், அவர் ஏலம் எடுத்தபோது பிரீத்தி ஜிந்தா பெயரில் அந்த நிறுவனத்தில் ஒரு பங்கு கூட இல்லை. பின்னர் அவர் எப்படி அந்த நிறுவனத்துக்காக கையெழுத்து போட்டார்?.

தற்போது வருமான வரி மற்றும் அமலாக்க பிரிவு அதிகாரிகள் இந்த பினாமி பங்கு விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை முடிந்து அவர்கள் அறிக்கை கொடுக்கும்போதுதான் எங்களுக்கு முழு விவரங்களும் தெரிய வரும்.

கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐ.பி.எல். அலுவலகங்களில் இருந்து பல முக்கிய ஆவணங்கள் மாயமாகிவிட்டன. அவை எங்கே?.

சோனி நிறுவனத்துக்கு ஒளிபரப்பு உரிமம் வழங்கிய ஆவணங்களும் எங்களிடம் இல்லை. எனவே இந்த குற்றச்சாட்டுகள் பற்றி பாரபட்சமற்ற விசாரணை நடத்துவதற்காகவே மோடியை சஸ்பெண்ட் செய்திருக்கிறோம்.

ரகசியமாக வைத்திருக்க வேண்டிய கிரிக்கெட் வாரியத்தின் சில தகவல்களை ஊடகங்களுக்கு லலித் மோடி வெளியிட்டுள்ளார்.

ஐ.பி.எல். அணி ஏல விவகாரத்தில் மத்திய அமைச்சர் சரத் பவாருக்கோ அல்லது அவருடைய குடும்பத்தினருக்கோ எந்த தொடர்பும் இல்லை.

கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் எந்தவித அரசியல் தலையீடும் இல்லை. வாரியம் எடுக்கும் முடிவுகளை யாரும் மாற்ற முடியாது என்றார் மனேகர்.

நானே இன்னும் தலைவர்- மோடி:

இந் நிலையில் நான்தான் இன்னும் ஐபிஎல் தலைவராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் மோடி.

ஐபிஎல் இறுதிப் போட்டி முடிந்த அடுத்த விநாடி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார் மோடி. புதிய இடைக்காலத் தலைவராக சிரயு அமீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நானே தலைவர் என்று தனது ஆதரவாளர்களுக்கு ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார் மோடி.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தியில், உங்கள் அனைவரின் ஆதரவு செய்திகளுக்கும் நன்றி. இதை நான் மனதார பாராட்டுகிறேன். நான் இன்னும் ஐபிஎல் தலைவர்தான். சஸ்பெண்ட் மட்டும்தான் ஆகியுள்ளேன்.

பொறுத்திருங்கள், இப்போதுதான் ஆரம்பமாகியிருக்கிறது என்று கூறியுள்ளார் மோடி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X