தென் மாவட்டங்களி்ல் குடிசை வீடுகள் குறைவு!
சென்னை: தென் மாவட்டங்களில் குடிசை வீடுகள் குறைவாக இருப்பதால், கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தைச் செயல்படுத்தும்போது அந்த மாவட்டங்களில் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டசபையில ஊரக வளர்ச்சி, ஊராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் அவர் பேசுகையில்,
ஏழ்மையின் முகவரியான குடிசைகளை அழிக்கும் நல்ல முயற்சியாக கலைஞரின் வீட்டு வசதித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 28 லட்சம் குடிசைகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்பட உள்ளன.
விழுப்புரம், கடலூர் போன்ற வட மாவட்டங்களில் குடிசை வீடுகளின் எண்ணிக்கை 54 சதவீதமாக உள்ளது. ஆனால், திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் குடிசை வீடுகள் 10 சதவீதம் மட்டுமே உள்ளன.
இதனால், அடுத்த 6 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட உள்ள மிகப்பெரிய திட்டத்தின் பலன்கள் தென் மாவட்டங்களுக்கு முழுமையாக கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.
பிகார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்படும்போது, வளர்ந்த காரணத்தால் மற்ற மாநிலங்களைப் புறக்கணிக்கலாமா என்று கேட்டோம். எங்கள் மாவட்டங்களில் குடிசைகள் இல்லாத காரணத்தால் நாங்கள் என்ன பாவம் செய்தோம்?.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்: வேண்டுமானால் புதிதாக குடிசை வீடுகளைக் கட்டுங்கள் (அவையில் பலத்த சிரிப்பு)
பீட்டர் அல்போன்ஸ்: குடிசைகள் குறைவாக இருக்கிற தென் மாவட்டங்களுக்கு மாற்று ஏற்பாட்டு திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்றார்.
சென்னையில் ரூ.1,500 கோடி நிலங்கள் மீட்பு:
பீட்டர் அல்போன்ஸைத் தொடர்ந்து மேலும் பல உறுபபினர்கள் பேசிய பின் பதிலுரையாற்றிய ஸ்டாலின் கூறியதாவது:
சென்னை செனாய் நகர் அமைந்தகரை பகுதியில் 8.5 கிரவுண்ட், மாடம்பாக்கம் பகுதியில் 30.25 ஏக்கர், அசோக்நகர் 12-வது அவென்யு பகுதியில் 10 கிரவுண்ட், சென்னை சென்ட்ரல் அருகே விக்டோரியா மகாராணி ஹாலில் 44 கிரவுண்ட் ஆகிய நிலங்கள் தனியாரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
இது, கடந்த நான்கு ஆண்டுகளில் மாநகராட்சி மேற்கொண்டுள்ள நடவடிக்கையாகும். மொத்தம் 52 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு, ரூ.1,500 கோடியாகும்.
மீஞ்சூர், நெம்மேலியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீஞ்சூரில் ஜூன் மாத இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு குடிநீர் கிடைக்கும். இதேபோன்று, நெம்மேலியில் வரும் 2011ம் ஆண்டு டிசம்பரில் பணிகள் நிறைவடையும்.
இரண்டு திட்டங்களின் மூலம், தலா 100 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னைக்குக் கிடைக்கும். இதனால், வறட்சி ஏற்பட்டால் கூட சென்னை நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல், உறுதி செய்யப்படும்.
நடப்பாண்டில் கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் மாற்றம் செய்யப்பட உள்ள குடிசை வீடுகளைக் கண்டறிவதற்கான கணக்கெடுப்பு ஜூன் மாதத்துக்குள் நிறைவடையும்.
வரும் 2016ம் ஆண்டில் நாட்டிலேயே குடிசைகள் இல்லாத முதல் மாநிலம் என்ற பெருமையை தமிழகம் பெறும் வகையில், கலைஞர் வீட்டு வசதித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக, நடப்பாண்டில் 3 லட்சம் குடிசை வீடுகள் ரூ.1,800 கோடி செலவில் கான்கிரீட் வீடுகளாக கட்டித் தரப்படும்.
கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள குடிசைகளைக் கண்டறிவதற்கான கணக்கெடுப்பு மார்ச் 29ம் தேதி தொடங்கப்பட்டு, விரைவாக நடைபெற்று வருகிறது.
இப்போதுள்ள கணக்கெடுப்பின்படி, 11,222 ஊராட்சிகளில் 15 லட்சத்து 25 ஆயிரத்து 230 குடிசைகள் வீடுகள் கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதி உடையவை என்று கண்டறியப்பட்டுள்ளன.
ஊரகக் குடிசைப் பகுதிகளில் சாதி-மத வேறுபாடுகள் அற்ற நிலையை உருவாக்க இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications