5 லட்சம் வங்கிப் பணியாளர்களுக்கு கணிசமான ஊதிய உயர்வு

கிட்டத்தட்ட 5 லட்சம் வங்கி ஊழியர்கள் 17.5 சதவிகித சம்பள உயர்வைப் பெறவிருக்கிறனர். இதற்கான ஒன்பதாவது ஊதிய சீராய்வு ஒப்பந்தத்தில் இந்திய வங்கிகள் சங்கமும் அனைத்து வங்கிப் பணியாளர் யூனியன்களும் கையெழுத்திட்டன.
நவம்பர் 1, 2007 பின் தேதியிட்டு இந்த ஊதிய உயர்வு தரவிருப்பதால், கணிசமான தொகை ஒவ்வொரு ஊழியருக்கும் தரப்பட உள்ளது. இதனால் வங்கித் துறையில் கூடுதலாக ஆண்டுக்கு ரூ 5200 கோடி செலவாகும்.
இதில் அரசுத் துறை வங்கிகளுக்கு மட்டும் ரூ 4816 கோடி கூடுதல் செலவாகும். தனியார் துறைக்கு ரூ 400 கோடி.
அரசுத் துறை வங்கி ஊழியர்களுக்கு இப்போதைய நிலவரப்படி ஆண்டுக்கு 27520 கோடி சம்பளத்துக்காக மட்டும் செலவாகிறது. இப்போதைய உயர்வையும் சேர்த்தால் ரூ 32 ஆயிரம் கோடிகளைத் தாண்டுகிறது.
இந்த சம்பள உயர்வு 26 அரசு வங்கிகள், 12 தனியார் வங்கிகள் மற்றும் 8 வெளிநாட்டு வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்குப் பொருந்தும்.
இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தப்படி, இனி ஆரம்ப நிலை அலுவலர்களின் அடிப்படைச் சம்பளம் ரூ 14500 லிருந்து 52000 வரை இருக்கும்.
கிளர்க் நிலை பணியாளர்கள் அடிப்படைச் சம்பளம் ரூ 6200 முதல் 23900 வரை இருக்கும். கீழ்நிலைப் பணியாளர்களின் அடிப்படைச் சம்பளம் ரூ 5500 முதல் 13800 வரை இருக்கும்.
மேலும் ஓய்வு பெறும் ஊழியர்கள் பென்ஷன் திட்டத்தில் சேரும் வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது. இதில் சேர விரும்புவோர் ஓய்வு பெறும்போது 50 சதவிகித பிஎப் தொகையை சரண்டர் செய்ய வேண்டும்.
இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தத்துக்கு அனைத்து வங்கிப் பணியாளர் யூனியன்களும் வரவேற்பு தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications