சுவிஸ் வங்கியில் ஐபிஎல் பணம் குவிப்பு – அமலாக்கப் பிரிவு விசாரணை
மும்பை: ஐபிஎல் முறைகேடுகள் மூலம் கிடைத்த பணத்தில் பெரும்பகுதியை ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் போட்டுள்ள விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியாவிலேயே மிகப் பெரிய ஊழலாக ஐபிஎல் மோசடிகள் உருமாறும் வாய்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த அளவுக்கு ஐபிஎல் ஊழலின் அளவும், பரவலும் படு பயங்கரமாக இருக்கின்றன.
ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகள் ஏலம் விடப்பட்டதிலும், போட்டிகளை டி.வி.யில் ஒளிபரப்பு செய்ய ஒப்பந்தம் போடப்பட்டதிலும் நிதிமுறை கேடுகள் நடந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அணிகள் ஏலம், அதன் உரிமையாளர்களின் வருவாய் பற்றி வருமான வரித்துறை நடத்திய முதல் கட்ட விசாரணையிலேயே வெளிநாடுகளில் இருந்து பணம் கொண்டு வந்து ஹவாலா மோசடி செய்ததும், கருப்பு பணத்தை வெள்ளை ஆக்கி இருப்பதும் தெரிந்தது. இந்த பண பரிமாற்றம் பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்திய போது சுவிஸ் வங்கிகளிலும் பெருமளவில் பணத்தை போட்டு வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
ஐ.பி.எல். நிதி மோசடி பணத்தில் 20 கோடி ரூபாய் சுவிஸ் வங்கி ஒன்றில் போடப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. நைஜீரியா, மொரிஷியஸ், ஹாங்காங், இங்கிலாந்து நாட்டு வங்கி கணக்கு பரிமாற்றங்கள் மூலமாகவும் நிதி மோசடி நடத்தப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். அமைப்பு மட்டுமின்றி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திலும் இத்தகைய மோசடி நடந்திருப்பதாக வருமான வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறினார். சுவிஸ் வங்கியில் போடப்பட்டுள்ள கோடிக்கணக்கான பணம் விதிமுறைகளை மீறி ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்துள்ளது.
சுவிஸ் வங்கி இந்த பணம் பற்றிய முழு தகவல்களை தர மறுக்கிறது. இதனால் மோசடியில் ஈடுபட்டு பணம் குவித்தவர்களை கண்டுபிடிக்க அமலாக்கப் பிரிவினரும், வருமான வரித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications